Thursday 26 January 2017

தமிழக மாணவர் போராட்டம் சொல்லித்தரும் பாடங்கள்


ஏறு தழுவுதல் உரிமையை பிரதானமாக கொண்டு தமிழக இளையவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏழு நாட்கள் நடத்திய போராட்டம் வெற்றியடைந்த போதும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களையும் அது விட்டு சென்றுள்ளது.

இது வெறுமனே ஜல்லிக்கட்டு போராட்டமாக பார்க்க முடியாது. ஊழல் முதல் விவசாயிகள் தற்கொலை வரை பல்வேறு பிரச்சனைகளால் மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த இளையவர்கள் வெடித்து கிளம்பிய ஒரு இடமே ஜல்லிக்கட்டு. மேலும் மாணவர் போராட்டம் இத்தனை பெரிதாகும் என்று உளவுத்துறை எதிர்பார்க்காமை, ஜெயலலிதா போன்ற ஒரு மக்கள் விரோத சர்வாதிகாரி முதலமைச்சராக இல்லாமை, அதிமுக கட்சியில் இடம்பெற்றுவரும் அதிகார போட்டி போன்ற பல காரணிகளும் போராட்டம் வெற்றி பெற ஏதுவான சூழலை ஏற்படுத்தியிருந்தன.

ஒரு தலைவனோ அரசியல் கட்சியோ அமைப்புகளோ தலைமை தாங்காமல் இளையவர்கள் தாமாக ஒன்று கூடி இந்த போராட்டத்தை நடத்தியமை அனைவரையும் வியக்க வைத்து உலகுக்கே முன் உதாரணமாக அமைந்து விட்டது என்பது உண்மைதான். அதேவேளை தன்னிச்சையான மக்கள் போராட்டம் ஒன்றை அதிகார வர்க்கத்தாலும் சந்தர்ப்பவாதிகளாலும் திசை திருப்பவும் முடியும் என்பதை இந்த போராட்டம் கோடிட்டு காட்டியுள்ளது.

மக்கள் போராட்டம் ஒன்றில் சினிமா நட்சத்திரங்களோ பிரபலங்களோ அனுமதிக்கப்படுவது ஆபத்தில் சென்று முடியும் என்பதை முதல் பாடமாக கொள்ளலாம். ஹிப்ஹாப் ஆதி, ஆர்ஜே பாலாஜி, லோரன்ஸ், விவேக், சிம்பு போன்றவர்கள் போராட்டத்தை கடைசி நேரத்தில் திசை திருப்பவும் கொச்சைப்படுத்தவும் காரணமாக அமைந்தனர். ஆரம்பத்தில் வீராவேசமாக பேசிய சேரன், அமீர் போன்றோர் பின்னர் காணாமல் போயினர். என்னதான் பிரபலம் ஒருவர் மூலம் போராட்டக்காரரின் கருத்துக்கள் செய்தி ஊடகங்களின் கவனத்தை பெறுகிறது என வாதிட்டாலும் அது போராட்டத்தை ஆபத்தில் தள்ளவே பெரும் வாய்ப்புள்ளது என்பதை இந்த ஏறுதழுவுதலுக்கான உரிமை போராட்டம் வெளிப்படையாக காட்டி நிற்கிறது. மக்களின் நியாயமான உரிமை போராட்டத்திற்கு பிரபலங்களின் முகங்கள் தேவைப்படாது. அவர்களின் தார்மீக ஆதரவே போதுமானது. இந்த இடத்தில் நடிகர் கமல் இளையவர்களின் போராட்டத்தில் நடிகர்கள் நுழைந்து ஊடகங்களின் கவனத்தை திசை திருப்ப கூடாது என்று ஆரம்பத்திலேயே தெளிவாக கூறியமையை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

நடிகர்கள் பிரபலங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட ஒரு வாழ்வில் இருப்பவர்கள். அவர்கள் இயல்பாகவே தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும், ஊடகங்களின் ஒளி தம்மீது படவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் போராட்ட களத்தின் யதார்த்தம் வேறு மாதிரியானது. அவர்களால் அந்த வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாது. மக்களின் உரிமையே போராட்டத்தின் மையம் என்பதை அவர்களால் உணர முடியாத அளவுக்கு ஊடக வெளிச்சம் அவர்களின் கண்களை மறைக்கும். எனவே ஆரம்பத்தில் பிரபலங்கள் எவ்வளவு உண்மையாக மக்கள் உரிமை போராட்டத்தில் பங்கெடுத்தாலும் அது கடைசிவரை அவ்வாறே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. போராட்டத்தை விரும்பாத அல்லது போராட்டத்தால் பாதிக்கப்படுகின்ற தரப்புகளும் பிரபலங்களை விலைக்கு வாங்குவதன் மூலம் போராட்டத்தை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது. மறுபுறம் பிரபலங்களின் சிறு உணர்வுகள் கூட போராட்டத்தின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கவும் சிலவேளை வெறுக்க வைக்கவும் முடியும். அதை இந்த ஏறு தழுவுதலுக்கான உரிமை போராட்டத்தின் இறுதி நாட்களில் காண முடிந்தது. குறிப்பாக இசையமைப்பாளர் ஆதியின் கருத்து போராடும் இளையவர்கள் நோக்கத்தையே கொச்சைப்படுத்தி மக்களை திசை திரும்புவதாக அமைந்தது.

அடுத்த பாடம் காவல்துறை ஒருபோதும் போராட்டக்கார்களது அல்லது மக்களது நண்பனாக இருக்கமுடியாது என்பது. ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு காவல்துறை உதவுவதாகவும் போராட்டக்காரர்களின் நண்பனாக காவல்துறை இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. உண்மையில் ஒரு முதலாளித்துவ நாட்டில் காவல்துறை என்பது ஆளும் வர்க்கத்திற்கு அதிகார வர்க்கத்தற்கு சேவை செய்யும் அமைப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தமது எஜமானர்களையும் அவர்கள் சார்ந்த முதலாளிகள் நிறுவனங்களையும் சார்ந்து நிற்பார்களே தவிர மக்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் இருக்கவும் முடியாது.

உண்மை இப்படியிருக்க இந்த போராட்டத்தில் காவல்துறை போராட்டக்காரர்களுக்கு சார்பாக இருக்கிறது என்றே திரும்ப திரும்ப புகைப்படங்கள் காணொளிகள் மூலம் சொல்லப்பட்டது. இந்த தவறான புரிதல் போராட்டங்களுக்கு புதிதான மாணவர்களிடமும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். மக்கள் மத்தியிலும் இப்படியான அபிப்பிராயமே சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டது.

ஆனால் ஏழாவது நாள் காவல்துறை செய்த கொடுமைகள் அவர்கள் ஒரு போதும் மக்களின் நண்பனாக இருக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாக பதிவுசெய்துள்ளது. தனியார் வாகனங்கள் குடிசைகள் சொத்துக்களுக்கு காவல்துறையே தீ வைக்கும் ஒளிப்படங்களைக்கண்டு முழு இந்தியாவும் அதிர்ந்துபோயுள்ளது. காவல்துறை பொது மக்களது பொருட்களை திருடும் காட்சிகளும் அப்பாவி பொதுமக்களை கதற கதற அடித்து துவைக்கும் காட்சிகளும், வன்முறையில் ஈடுபடும் காட்சிகளும், போராட்டக்காரர்களின் உணவை திருடி உண்ணும் காட்சிகளும் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

தமிழக காவல்துறை வன்முறையை தடுப்பதாக கூறிக்கொண்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தியயுள்ளது. கலவரத்தை அடக்குவதாக கூ றி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த காலங்களில் அணு உலை எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம், மீனவர் போராட்டம் என எல்லா சந்தர்ப்பங்களிலும் காவல்துறை பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து இருக்கிறது.

இலங்கையில் கூட சிங்கள மக்களில் பலர் தமிழர்களுடனான முரண்பாடு காரணமாக பாதுகாப்பு படையினருக்கு மிகுந்த ஆதரவை வழங்கி இருந்தார்கள். ஆனால் ஜேவிபி அமைப்பின் போராட்டத்தை அடக்க தமது சொந்த சிங்கள மக்கள் மீதே மிக கொடூரமான வன்முறையை இலங்கை படையினர் நிகழ்த்தியிருந்தார்கள். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள கிராம மக்கள் மீது கோட்டாபே ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல அமெரிக்காவில் Dakota Access oil pipeline permit தொடர்பான அமெரிக்க பூர்வ குடிகளின் போராட்டத்தின் போதும் அமெரிக்க காவல்துறை வன்முறையை நடத்தியிருந்தது. வடக்கிலிருந்து எண்ணெயை கொண்டு செல்லும் குழாய்களை தமது பாரம்பரிய நிலங்களினூடாக அமைப்பதற்கு அம்மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இத்திட்டமானது தமது பாரம்பரிய நிலங்களை பாழ்படுத்துவதுடன் தம்மை அந்த பாரம்பரிய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தை கொண்டதென அம்மக்கள் அறப்போராட்டத்தை நடத்தினர். ஆனால் முதலாளிகளின் அடியாட்களான அமெரிக்க காவல்துறை வழமை போல பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. ஆக முன்னேறிய அமெரிக்க என்றால் என்ன, வறுமையான இந்தியா இலங்கை என்றால் என்ன எல்லா இடங்களிலும் காவல்துறை அதிகார வர்க்கத்திற்கு சார்பாகவே நடந்து கொள்ளும் என்பது வெளிப்படை. எனவே போராட்டக்கார்கள் காவல்துறையை அண்டவிடுவது ஆபத்தாகவே முடியும்.

இன்னொருபுறம் இந்துத்துவ வலதுசாரிகள் இப்போராட்டம் மோடியை நோகடிக்கும் என்பதால் பல வகைகளிலும் எதிர்ப்பை காட்டினார்கள். ஹெச்.ராஜா, சுப்பிரமணிய சாமி போன்ற பா.ஜ.கவினர் நேரடியாக எதிர்ப்பை காட்டினார்கள். ஆனால் இந்துத்துவ கருத்துக்கு ஆதரவான பொதுமக்களும் இளையவர்களும் (இவர்களில் மிக பெரும்பாலானவர்கள் பிராமணர்களாக இருக்கின்றமை புரிந்துகொள்ள கூடியதே) ஆரம்பம் முதலே இந்த மாணவர் போராட்டத்தை சந்தேக கண்ணுடனும் தவறாகவும் எழுதி வந்ததை காண கூடியதாக இருந்தது. தற்போது போராட்டம் முடிந்த பின்னரும் காவல்துறையின் கொடுமைகளைப் பற்றி வாயே திறக்காமல் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று எழுதி வருகிறார்கள். எவ்வளவு சொல்லியும் கலைந்து போகாத காரணத்தால் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நேர்ந்தது என்று எழுதுகிறார்கள். ஏன் அன்று காலை 6 மணிக்கு வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றவேண்டும் சில மணி நேரங்கள் பொறுத்து சட்டப் பேரவையில் ஒருமனதாக ஜல்லிக்கட்டு தடையை முற்றிலும் நீக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட தகவலை மாணவர்களிடம் அறிவித்து கலைய சொல்லியிருக்கலாமே என்று இவர்களிடம் கேட்டால் பதில் இல்லை. இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த மெரீனா கடற்கரை தேவை என்று முட்டாள்தனமாக பதில் சொல்கிறார்கள். பொது பிரச்சனை ஒன்றுக்காக அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது இவர்களுக்கு தவறாகவே தெரியவில்லை என்பதே இங்கு கொடுமையானது. எனவே மிக சாதாரணமாக மக்களோடு மக்களாக இருந்து கொண்டே மக்களுக்கு எதிரான போக்கை கொண்டுள்ள இந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் சார்பு வலதுசாரிகள் போன்றோர் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

இந்த மாணவர் போராட்டத்தில் இடது சாரிகளின் நிலைப்பாடு நகைப்புக்குரியதாக இருந்தது. ஜல்லிக்கட்டை அவர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு வர்க்க மற்றும் சாதிய காரணங்களை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். முகநூலில் இயங்கும் இடதுசாரி சார்பானவர்கள் கூட ஆரம்பம் முதலே இந்த போராட்டத்தை எதிர்த்தும் கிண்டல் செய்துமே எழுதி வந்தார்கள். தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் போராட்டம் எதிர்பாராத வகையில் எழுச்சியடைந்ததும் தமது கருத்தை மாற்றி மெது மெதுவாக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டார்கள். காவல்துறை மக்களை தாக்கியதும் முற்று முழுதாக போராட்டத்தை இவர்களே நடத்தியது போல எழுத தொடங்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசாங்கமே இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கிறது என்று கூறிவிட்டு இப்போது அரசாங்கம் போராட்டத்திற்கு எதிரானது என்று மாற்றி எழுதுவது குறித்து அவர்கள் வெட்கப்படவில்லை. இடதுசாரிகளை போலவே விஷால், திரிஷா, ரஜினி குடும்பத்தவர் என பலரும் போராட்டத்தின் எழுச்சிக்கு பயந்து போராட்டத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை வெளியிட்டனர். எனவே இப்படியான சந்தர்ப்பவாதிகள் குறித்தும் இவர்களின் நகர்வு குறித்தும் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்வது அவசியம்.

இவை ஒருபுறமிருக்க இந்த ஏறு தழுவும் உரிமைக்கான போராட்டம் வேறு சில சிந்தனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போராடிய இளையவர்கள் தமக்கான தலைமை அல்லது தமது கருத்தை அதிகார பூர்வமாக வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்யாமை ஒரு பாதகமான அம்சமாக இருந்ததை காண கூடியதாக உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தியே ஆர்.ஜே.பாலாஜி, ஆதி, லோரன்ஸ் போன்ற சினிமாக்காரர்கள் அடிக்கடி ஊடகங்களில் தோன்றி போராட்டத்தை தமது தலைமையில் முன்னெடுப்பதுபோல காட்டிக்கொண்டார்கள். தமது சொந்த கருத்துக்களை போராட்டக்காரர்களின் கருத்தாக முன்வைத்தனர். இறுதியில் மாணவர் போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டமாக சித்தரித்தார்கள். இது குறித்து போராட்ட குழுவில் இயங்கிய இளைஞர் கூறும்போது '' லோரன்ஸ் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் அடிபட்டு வந்ததாக சொன்னார். எனவே அவருக்கு மட்டும் நாங்கள் ஒரு நாற்காலியை இருக்க கொடுத்தோம். ஆனால் அதனை அவர் போராட்டத்தின் தலைமையை அவருக்கு கொடுத்ததாக சூழலை மாற்றிக்கொண்டார். வேறு எவரையும் பேச விடாமல் அவராக கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவரும் அவரை சுற்றி இருந்த சிலரும் ஆரம்பத்திலிருந்து போராடிய மாணவர்களை ஊடக கண்களில் இருந்து அகற்றிவிட்டனர்'' என்றார். எனவே போராட்டம் ஒன்று நடக்கும் போது வெளி நபர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் மடத்தையே கட்டிவிடுவார்கள் என்பதும் இந்த போராட்டத்தில் வெளிப்பட்ட ஓர் அம்சமாக பார்க்கலாம்.

இவை தவிர போராடிய மாணவர்கள் மீது பல விமர்சனங்கள் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள், அதற்காக அவர்கள் போராட வரவில்லை. கூடங்குளம் போராட்டம் இடம் பெறும்போது கண்டுகொள்ளவில்லை, சாதிய வன்முறைகள் இடம்பெறும்போது அதற்கு எதிராக போராடவில்லை, தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா கொள்கை திணிப்பு மற்றும் மத வன்முறைகளுக்கு எதிராக போராடவில்லை, மத்திய அரசின் கல்வி கொள்கை மற்றும் தனியார் கல்வி கொள்ளைக்கு எதிராக போராடவில்லை ஆனால் வருடத்தில் ஒருமுறை நடக்கும் ஏறு தழுவும் விளையாட்டுக்கு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள் என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களில் உண்மை இருந்தபோதும் சினிமாவிலும் சமூக வலைத்தளங்களிலும் வீணாக நேரத்தை செலவழிக்கும் பொறுப்பற்ற ஊதாரிகளாக எண்ணப்பட்ட இன்றைய இளையவர்கள் பொது பிரச்சனை ஒன்றுக்காக அதிகார வர்க்கத்திற்கு எதிராக சுயநலம் இன்றி ஒன்று கூடி போராடினார்கள். அறவழியில் சிறிதும் குழப்பங்கள் இன்றி போராடினார்கள். வன்முறைகளில் இறங்கவில்லை. நூறு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இருந்தாலும் எந்த சீண்டலோ தொந்தரவோ இல்லாமல் பண்பு காத்தனர். கட்டுக்கோப்பாக நடந்து கொண்டனர். போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, குப்பைகளை அகற்றுவது என அருமையாக தன்னிச்சையாக செயல்பட்டார்கள். விமர்சனங்களுக்கு அப்பால் இவை போன்ற சாதக அம்சங்களை பார்க்கும் போது விமர்சங்களை இலகுவாக கடந்து சென்றுவிட முடிகிறது. மேலும் எதிர்காலத்தில் அவற்றை திருத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

ஆக இந்த மாணவர் போராட்டம் பல பாடங்களை எதிர்கால மக்கள் போராட்டங்களுக்கு விட்டு சென்றுள்ளது. கற்றுக்கொண்டால் நல்லது.

- என்.ஜீவேந்திரன்.

Friday 9 January 2015

ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ச


தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து மகிந்த ராஜபக்ச எனும் சர்வாதிகாரியை வீழ்த்தி இருக்கிறார்கள், இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தேர்தல் மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவே அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த பகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவை விட மகிந்த பெற்ற மேலதிக வாக்குகளை பாருங்கள்-

களுத்துறையில் 46,486, காலியில் 83,132, மாத்தறையில் 85,388, அனுராதபுரத்தில் 42,754, கேகாலையில் 25,597, இரத்தினபுரியில் 86,539, ஹம்பாந்தோட்டையில் 1,04,587, மொனராகலையில் 67,469, குருணாகலையில் 80,266, மாத்தளையில் 12,952. மேற்குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்களில் மைத்திரியை விட மகிந்த 6,35,170 வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மைத்திரிபாலாவுக்கு வாக்களித்த சிங்கள பிரதேசங்கள் என்று பார்த்தால் பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா என்பன மட்டுமே இருக்கின்றன. இதில் பொலநறுவை மைத்திரிபாலவின் சொந்த மாவட்டம். அங்கு அவருக்கு 42,334 மேலதிக வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் மகாநுவரவில் 88,409 மேலதிக வாக்குகளும், கம்பஹாவில் வெறுமனே 4 660 வாக்குகளும் என மொத்தமாக 1,35,403 வாக்குகளே மேலதிகமாக கிடைத்திருக்கின்றன.

இவை தவிர்த்து கொழும்பு என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. தமிழ் முஸ்லிம் மக்கள் மிக செறிவாக வாழும் தேர்தல் மாவட்டம். இங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி மைத்திரிபால 1,62,459 வாக்குகள் மேலதிகமாக பெற்றிருக்கிறார். கொழும்பையும் தனி சிங்கள மக்களின் பிரதேசமாக கொண்டு பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா மாவட்டங்களுடன் சேர்த்தாலும் கூட மொத்தமாக மைத்திரிபாலவிற்கு சிங்கள மக்களால் கிடைத்த மேலதிக வாக்குகள் 2,97,862 மட்டுமே.

ஆனால் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களான யாழ்ப்பாணத்தில் 1,79,120, மட்டக்களப்பில் 1,67,791, வன்னியில் 1,07,040, நுவரெலியாவில் 1,27,266, திகாமடுல்லவில் (அம்பாறை) 1,12,333, திருகோணமலையில் 88,227 வாக்குகள் என மகிந்தவை விட மைத்திரிபால சிறிசேனவுக்கு மொத்தமாக 7,81,777 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

கொழும்பை தவிர்த்துவிட்டு பார்த்தால்-

சிங்கள பிரதேசங்கள் மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.

சிங்கள பிரதேசங்கள் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.

அதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர்.

இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மகிந்த எனும் இனவாத சர்வாதிகாரியை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குப்பலமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பதை தெளிவாக காண முடிகிறது.

இதேவேளை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இப்படி மகிந்த தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கவேண்டியவர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2005 நவம்பர் 17 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தமை மாபெரும் அழிவு சரித்திரத்தை உருவாக்கியது. வட மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில் வெறும் 1,90,000 மேலதிக வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத தோல்வியை தழுவினார்.

நல்லவேளையாக இம்முறை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்காது தமது வாக்குகளின் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். நவீன துட்டுகெமுனு அரசனாக தன்னை நிலை நிறுத்தி, தமிழர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற அரசனாக மகாவம்சத்தில் இடம்பெற துடித்த இனவாதிக்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். வெல்ல முடியாத போர் என்று சர்வதேசத்தாலும் வர்ணிக்கப்பட்ட போரை வென்று காட்டிய மாவீரனாக, சாகும் வரை ஜனாதிபதியாக அதிகாரத்துடன் வாழ ஆசைப்பட்ட மகிந்தவின் பேராசைக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சாவு மணியடித்திருக்கிரார்கள்.

அசைக்க முடியாத மகிந்தவுக்கு சரியான போட்டியாளரை மகிந்தவின் மடியிலிருந்தே பிரித்தெடுத்து சாணக்கியமாக சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சாதித்த சந்திரிகா குமாரதுங்கவும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவர்.

இலங்கை ஜனாதிபதியாக ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை மீறி, அரசியலமைப்பை மாற்றி, நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி மூன்றாவது முறையாகவும் அதிகாரத்தை சுகிக்க பேராசைப்பட்ட மகிந்த தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும்போதே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு முற்றாக சரியும் முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வென்றுவிட வேண்டும் என்ற அல்லக்கைகளின் ஆலோசனையை கேட்டு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தேர்தலை மகிந்த சந்தித்தார். மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவை அதிகாரத்திலிருந்து அசைக்கமுடியாது என்று சாத்திரம் கூறியிருந்தார். திருப்பதிக்கு சென்று மகிந்த ஆசியும் வாங்கி இருந்தார். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தவின் ஆட்டத்தை முடித்துவைத்துவிட்டனர்.

குற்றவாளி மகிந்தவை வீழ்த்துவது என்ற நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் தமிழர்களுக்கான சம உரிமை என்ற நோக்கம் நிறைவேறும் காலம் அருகில் இருப்பதாக தெரியவில்லை.

என். ஜீவேந்திரன்.

Saturday 16 November 2013

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட மகிந்த


பிரித்தானியாவின் முன்னாள் அடிமைகள் கூடி கொண்டாடும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தி நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட மகிந்தவின் சகல துவாரங்களிலும் சர்வதேச ஊடகங்கள்(மீடியாக்கள்) ஆப்புகளை சொருகியுள்ளன.

பொதுநலவாய மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை பெறுவதுடன் நடந்த போர்க்குற்றங்களை மாநாட்டு கம்பளத்தின் கீழ் மறைத்துவிடலாம் என்ற மகிந்தவின் கணக்கு பொய்த்து போயிருக்கிறது.

இந்த மாநாட்டை புறக்கணிப்பதன் மூலமே இலங்கைக்கு அழுத்தத்தை வழங்கலாம் என்றும் இல்லை கலந்துகொள்வதன் மூலமே அழுத்தத்தை வழங்கலாம் என்றும் இந்த மாநாடு தொடர்பில் இரு வேறுபட்ட வாதங்களை காணக்கூடியதாக இருந்தது.

கனடா,மொரிசியஸ் நாடுகள் மாநாட்டை முழுமையாக புறக்கணித்தன. உலகத்திலேயே எதிலும் சேர்த்தியில்லாத 'கைப்பிள்ளை' நாடான இந்தியா வெளியுறவு துறை அமைச்சரை அனுப்பி சமாளித்து கொண்டது.

இதில் ஒரு சிறிய தீவான மொரிசியஸ் நாடு போர் குற்றத்திற்கு எதிரான கண்டனத்தை மிக பலமாக பதித்து இருக்கிறது. தனது நாட்டில் நடக்கவிருந்த பொதுநலவாய மாநாடு மாநாட்டுக்கான வாய்ப்பை பலி கொடுத்து இந்த முடிவை எடுத்த மொரிசியஸ் மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடே தனது முன்னாள் அடிமைகள் நடத்துவது என்ற நிலையில் பிரித்தானியா வேறு மாதிரி நடந்து கொண்டது. பிரித்தானியாவின் செல்ல பிள்ளையான இலங்கையில் நடக்கும் முன்னாள் அடிமைகளின் மாநாட்டை புறக்கணிப்பது ஆண்டான் பிரித்தானியாவுக்கு சாத்தியமானதல்ல. அரசனில்லாமல் அடிமைகள் ஒன்று கூடுவதால் என்ன பலன்?

ஒரு புறம் மகிந்தவையும் சிங்கள மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். மறுபுறம் போர்குற்றத்தால் எழுந்துள்ள அழுத்தத்தை சமாளிக்க வேண்டும். இந்த இடத்தில்தான் பிரித்தானியாவின் வழமையான நரித்தனம் வெளிப்படுகிறது.

மகிந்தவையும் சிங்கள மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் பொறுப்பை இளவரசர் 'கமிலா புகழ் சார்ல்ஸ்' எடுத்துக்கொண்டார். மகிந்தவுடன் விருந்துண்டு பிரித்தானியாவின் ஆதரவு உங்களுக்குத்தான் என்று காட்டிக்கொண்டார்.

போர்குற்றத்தால் எழுந்துள்ள அழுத்தத்தை சமாளிக்கும் பொறுப்பை பிரதமர் கமரூன் எடுத்துக்கொண்டார். யாழ்ப்ப்பாணத்திற்கு சென்றார், மக்களை சந்தித்தார், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக காட்டிக்கொண்டார்.

இந்த இடத்தில் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.கனடா, மொரிசியஸ் நாடுகள் புறக்கணித்தன, இந்திய பிரதமர் செல்லவில்லை என்பது முக்கிய விடயமாக கருதப்பட்டது. அது தொடர்பில் கவனமும் விவாதமும் கலந்துரையாடலும் எழுந்தன. எனவே புறக்கணிப்பாலும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்பட்டமை வெளிப்படையானது.

அதேபோல கமரூன் கலந்து கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை சந்தித்ததும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது என்பதும் வெளிப்படையானது. எனவே இரண்டு விதமாகவும் அழுத்தம் ஏற்பட்டே இருக்கிறது.

எல்லோரும் எதிர்பார்த்தபடி தமக்கான நிகழ்ச்சி நிரலில் சாதகமாக பயணிப்பதாக தோன்றியது. எனினும் பால் கடலை மகிந்த அதிகமாக கடைந்து விட்டதால் எதிர்பாராத ஒரு திருப்பமாக வடக்கு மக்கள் மீது சர்வதேச ஊடக வெளிச்சம் விழுந்தது. மாநாட்டு செய்திகளை சேகரிக்க வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் (மீடியாகாரர்கள்) போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு தமிழ் மக்களை கவனத்தில் கொண்டார்கள்.

கொடிய போரின் வலிகளை சுமந்த மக்கள் அரச தடைகளையும் மீறி சர்வதேசத்துடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று மேற்கின் பல ஊடகங்களும் மாநாட்டு செய்திகளை விட பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைக்கு வந்து சுயாதீனமாக மக்களை சந்தித்து தகவல்களை சேகரிக்க முடியாதபடி மகிந்த அரச அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. ஆனால் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்க மிக அதிகளவு வெளிநாட்டு ஊடகவியலார்கள் சட்ட ரீதியாக வந்து இறங்கி இருக்கிறார்கள். வடக்கிற்கு செல்கிறார்கள், தமிழர்களை சந்திக்கிறார்கள், மக்கள் சொல்வதையும் மனித உரிமை வாதிகள் சொல்வதையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.

போர்க்குற்றம் தொடர்பில் பலரும் வெளிப்படையாக பேசவும் விவாதிக்கவும் பெரும் களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியாத மக்கள் கூட தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மகிந்தவுக்கு ஆதரவாக போர்க்குற்றங்களை பேசாமல் மறைத்தவர்கள் கூட பேசாமல் இருக்க முடியாத நிலையை காணக்கூடியதாகவுள்ளது. நீதியான விசாரணை வேண்டும் என்ற வாதம் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.

மாநாட்டை நடத்தி மாலை மரியாதைகளுடன் தலை நிமிர்ந்து சிங்கமாக நடக்க ஆசைப்பட்ட மகிந்த இப்போது அசிங்கப்பட்டு போயிருக்கிறார். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன….

ஊடகங்களால் மகிந்தவின் கோவணம் உருவப்பட்டிருக்கிறது.

ஜீவேந்திரன்

Saturday 24 November 2012

பாலஸ்தீனத்தின் கண்ணீர் - ஐ.நா. சொல்ல மறந்த கதை

பாலஸ்தீனத்தின் கண்ணீர் - ஐ.நா. சொல்ல மறந்த கதை

'இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் உலகம் காணாத பேரழிவிற்கு உட்பட்ட யூதர்கள் தமது பூர்வீக நாடான இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தனர். கட்டாந்தரையாக மக்கள் வாழாத இடமாக கிடந்த நிலத்தில் யூதர்கள் தமது குடியிருப்புகளை அமைத்தனர்.அவர்களை பாலஸ்தீனர்களும் அரபுக்களும் தாக்கினர். எனவே தம்மை பாதுகாத்துக்கொள்ளுமுகமாக யூதர்கள் போர்களில் ஈடுபட்டனர்'.

இப்படித்தான் எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனம் பற்றி அறிந்து வைத்துள்ளனர்.ஆனால் உண்மை அதுவல்ல.

பாலஸ்தீனம் என்பது மிகவும் உயர்வான கலாசாரம் கொண்ட மக்கள் வாழ்ந்த பிரதேசம். அதை யூதர்கள் ஆக்கிரமித்தனர். இன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மத தீவீரவாதம் இந்தளவு கொழுந்து விட்டு எரிவதற்கு பாலஸ்தீன ஆக்கிரமிப்பு ஒரு மிக முக்கிய காரணமாக அமைகிறது. இஸ்லாமிய மத பயங்கரவாதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எவ்வளவு சரியானதோ அதேபோல அல்லது அதைவிட ஒரு மடங்கு மேலாக சியோனிச பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சியோனிசம் என்பது யூத தேசியவாதத்தின் அடிப்படையாகும். பைபிள் (பழைய ஏற்பாடு ) கதையின் அடிப்படையில் ஜகொப் (Jacob) என்பவரது வாரிசுகளே யூதர்கள், அவர்களது நிலமே இஸ்ரேல். எனவே உலகம் முழுவதும் பரவி கொடுமைக்கு உள்ளாகும் யூதர்களது துன்பத்திற்கு முடிவாக இருக்கூடியது தமது பூர்வீக நாடான இஸ்ரேலை மீண்டும் அடைவது என்பதே சியோனிசவாதிகளின் வாதமாகும்.

இந்த வாதத்தின் அடிப்படையில் 1881 இல் பாலஸ்தீனத்தில் நவீன கால குடியேற்றம் ஆரம்பமானது. இந்த குடியேற்றம் போரின் அடிப்படையில் அல்லாது அரேபியர், துருக்கியரிடமிருந்து நிலங்களை வாங்குவதன் மூலம் இடம்பெற்றது.

1878 ஆம் ஆண்டு 462 465 ஆக இருந்த பாலஸ்தீன சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 96 வீதமாக இருந்தனர். யூதர்கள் 3.2 வீதமே இருந்தனர்.

ஆனால் 1882-1914 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவிலிருந்து 65 000 யூதர்கள் புதிதாக வந்து குடியேறினர். இதன் பலனாக 1922 ஆம் ஆண்டு சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 87.6 வீதமாகவும், யூதர்கள் 11 வீதமாகவும் மாறினர். இதற்கு இஸ்ரேல் எனும் தனி நாடு அமைவதில் பிரித்தானியா காட்டிய அக்கறை முக்கிய காரணமாக இருந்ததுடன் யூதர்களுக்கு பலத்தை தருவதாகவும் அமைந்தது. குறிப்பாக 1920 களில் பாலஸ்தீனம் பிரித்தானிய நிர்வாகத்துக்குள் வந்தமை பாலஸ்தீனர்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

1920-1931 ஆண்டு காலப்பகுதியில் மேலும் 108 825 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். இக்காலப்பகுதியில் அரேபியருக்கும் யூதருக்கும் இடையில் மோதல் வலுத்தது. 1929 ல் நிகழ்ந்த மோதல்களில் 133 யூதர்கள் அரபுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும் குடியேற்றம் தொடர்ந்தது. 1931ஆண்டு சனத்தொகையில் முஸ்லிம்களும் அரபு கிறிஸ்தவர்களும் 81.6 வீதமாகவும், யூதர்கள் 16.9 வீதமாகவும் மாறினர். இதற்கு ஜெர்மனியில் நாசிகளின் பயங்கரவாதமும் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக ஹிட்லரது பயங்கரவாதம் காரணமாக 1932-1936 ஆண்டு காலப்பகுதியில் 174 000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் வந்து குவிந்தனர். பின்னர் 1937-1945 ஆண்டு காலப்பகுதியில் 119 800 யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அதாவது 1878 ஆம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் தொகையில் 3.2 வீதமாகவும், 1922 ல் 11% வீதமாகவும் இருந்த யூதர்கள் 1940 ஆம் ஆண்டில் 30% வீதமாக உயர்ந்தனர். அதேபோல பாலஸ்தீனத்தின் 28 வீதமான நிலப்பகுதியும் சியோனிச நிறுவனங்களால் வாங்கப்பட்டு இருந்தன. யூத மக்களில் பலரும் தமக்கான நிலங்களை வாங்கி இருந்தனர்.

இந்த குடியேற்றங்களுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் கலகங்களில் ஈடுபட்ட போதும் யூதர்கள் வெற்றி கொண்டனர். இதேவேளை 1939 இல் பிரித்தானியா யூதர்களின் வருகையையும் ,யூதர்களால் பெருமளவில் நிலங்கள் வாங்கப்படுவதையும் கட்டுப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டது. பிரித்தானியாவின் ஆட்சியில் அதிருப்தி கொண்டிருந்த சில யூத ஆயுத குழுக்கள் பிரித்தானிய படைகளுக்கு எதிராக மறைமுகமான தாக்குதல்களில் ஈடுபட்டன. அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான வன்முறைகளை கட்டுப்படுத்தமுடியாத நிலையில் 1947 ஆம் ஆண்டு பிரித்தானியா பாலஸ்தீன பிரச்னையை ஐ.நா.விடம் கொண்டு சென்றது. ஐ.நா. வானது பிரித்தானிய அமெரிக்க அழுத்தங்களுக்கு உட்பட்டு பாலஸ்தீனத்தை அரபு, யூத நாடுகளாக பிரிப்பதாக அறிவித்தது.ஜெருசேலம் சர்வதேச நகராக அறிவிக்கப்பட்டது.

பாலஸ்தீன சனத்தொகையில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான சனத்தொகையை கொண்ட அரபுக்களுக்கு 43 வீதமான நிலத்தையும், மூன்றில் ஒரு சனத்தொகையை கொண்ட யூதர்களுக்கு 56 வீதமான நிலத்தையும் வழங்குவதாக ஐ.நா அறிவித்தது. அதிலும் யூதர்களுக்கு வளமான நிலங்கள் வழங்கப்பட்டதன.

எனினும் திருப்தியடையாத யூதர்கள் பல முக்கிய அரபு பிரதேசங்களை கைப்பற்றினர். நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அரபுக்கள் சகல உடமைகளையும் இழந்து அகதிகளாக பல நாடுகளுக்கும் தப்பியோடவேண்டி ஏற்பட்டது.

இதன் விளைவாக 1948 ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி அயல் நாடுகளின் அரபு ராணுவ வீரர்கள் பாலஸ்தீனத்தில் புகுந்தனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போரை மூர்க்கத்தனமாக நடத்தியது. இஸ்ரேலது யுத்த தந்திரங்களை நன்கறிந்த போர் வரலாற்று வல்லுனரான Martin Van Creveld இனது கருத்தின்படி படைப்பலத்தில் அரபு ராணுவமே பின்தங்கி இருந்தது. 68 000 அரபு படை வீரர்களும் 90 000 இஸ்ரேல் படை வீரர்களும் போரில் பங்கு கொண்டனர். 78 வீதமான பாலஸ்தீன நிலங்கள் இஸ்ரேலுக்கு உரியதாக மாறின. 'மேற்குக்கரை' ஜோர்தானின் கட்டுப்பாட்டிலும், 'காசா' பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டிலும் வந்தன.

போரின் பின்னர் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமாதானம் அறிவிக்கப்பட்டாலும் கூட பாலஸ்தீனத்தில் சமாதானம் கானல் நீராகவே அமைந்தது. எழு இலட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிமுகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பலஸ்தீன மக்கள் வாழ்ந்த நிலங்கள் யூத குடியிருப்புகளாகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றப்பட்டன. இதன் மூலமாக பாலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அழிக்கப்பட்டன. பாலஸ்தீனர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

1950 களிலும் முற்றாக அமைதி நிலவவில்லை.சிறு சிறு மோதல்கள் இடம்பெற்றே வந்தன. 1956 இல் எகிப்து சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கியது தொடர்பில் எகிப்திற்கும் பிரித்தானிய-பிரான்ஸ் தரப்புக்குமிடையே போர் ஏற்பட்டது. இதில் எகிப்திற்கு எதிரான அணியில் இஸ்ரேல் இணைந்து போரிட்டது.

1967ல் சிரியா, யோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடனான போரில் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரை ஆகியவை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மேலும் பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

ஆக்கிரமைப்பை கண்டித்த ஐ.நா பாதுகாப்புசபை ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியபோதும் இன்றுவரை அது இடம்பெறவேயில்லை. இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கம்,ஹமாஸ் போன்றவற்றின் தாக்குதல்களும் அதற்கு எதிரான பாதுகாப்பு தாக்குதல்கள் என்ற வகையில் இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்ந்தன.இஸ்ரேல் தனது பாதுகாப்பை காரணம் காட்டி சோதனைசாவடிகளையும் காசா போன்ற பகுதிகளை பிரித்து தடுப்பு சுவர்களையும் எழுப்பியுள்ளது. பாலஸ்தீன மக்களின் சுந்திர நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வைத்தியசாலையைக்கூட நூறு கிலோமீற்றர்கள் சுற்றி செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உணவு முதல் மருந்து வரை சகல அடிப்படை தேவைகளும் இஸ்ரேல் ராணுவத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் செல்வசெழிப்பான நாடாக மிளிர பாலஸ்தீனம் வேலையில்லா திண்டாட்டத்திலும் வறுமையிலும் உழல்கிறது.

இஸ்ரேல் நாட்டினை ஏற்றுக்கொண்டால் பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி கிடைக்கும் என்ற அடிப்படையில் 1994 இல் ஒஸ்லோ உடன்படிக்கையின்படி பாலஸ்தீன அதிகாரசபையை பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டார். அவர் இறந்தே பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக அது பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்குள் மேலும் அதிகமான உள்முரண்பாடுகளை ஏற்படுத்தியது. காசாவை ஹமாசும், மேற்குக்கரையை பத்தா அமைப்பும் கட்டுபாட்டில் கொண்டுள்ளன.

2008 டிசெம்பர் 27 ஆம் திகதி ஹமாஸ் குழுவினரின் எறிகணை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி மூன்று வார இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டது. இப்போரில் 1417 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காச பகுதியின் சகல கட்டமைப்புகளும் அழிவிற்கு உள்ளாகின. இப்படுகொலைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தென்னாப்பிரிக்க நீதிபதி ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் உருவாக்கிய குழு தனது அறிக்கையில் இஸ்ரேலின் போர் குற்றங்களை எடுத்து சொல்லியிருந்து. எனினும் வழமை போலவே இஸ்ரேல் அதனை கண்டுகொள்ளவில்லை. அந்த அறிக்கையும் குப்பையில் வீசப்பட்டுவிட்டது. ஐ.நா.இஸ்ரேல் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத வகையில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.

இன்றுவரை இந்த நிலையே பாலஸ்தீனத்தில் நிலவுகிறது. பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கெடுபிடிகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும், மீன்பிடி போன்ற வாழ்வாதார தடைகளுக்கும் உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு முறையாக மின்சாரமோ,எரிபொருளோ,சுதந்திர நடமாட்டத்திற்கான போக்குவரத்து வசதிகளோ இல்லை. இந்த மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலகில் எந்த சக்தியும் இல்லை.தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டியும், சுதந்திரமான வாழ்வு வேண்டியும் பாலஸ்தீன மக்கள் இந்தகணம் வரை போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவிலிருந்து தமது பிரதேசத்தின் மீது ஹமாசால் தொடுக்கப்படுகின்ற எறிகணை தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்காகவே தாக்குதல்களை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. சமாதானத்திற்கான நோபெல் பரிசு வாங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் இஸ்ரேல் தற்பாதுகாப்பு தாக்குதலையே மேற்கொள்வதாகவும் அதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உண்டென்றும் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

ஆனால் இஸ்ரேலில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டியே இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்பது அவதானிகளின் கருத்தாக இருக்கிறது.

இதேவேளை கடந்த வியாழன்று (29.11.12) பாலஸ்தீன வரலாற்றில் மிக முக்கிய நாளாக அமைந்தது. ஐ.நா சபையில் இது வரை பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மேற்கு கரை, காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்குமாறு ஐ.நா. பொது சபையில் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றுள்ளது. இது நூறு வீதம் தனி நாட்டுக்கான அங்கீகாரம் இல்லை என்ற போதும் ஐ.நா சபையினது பார்வையாளர் அந்தஸ்த்துக்கான பிரேரணையில் பாலஸ்தீனம் வெற்றி பெற்று விட்டது.

இதுவரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு பாலஸ்தீனம் இருந்து வந்திருந்தது. இப்போது கிடைத்த வெற்றியின் மூலம் ஐ.நாவின் பார்வையாளார் தகுதி பெற்ற நாடாக (Observer status) பாலஸ்தீனம் மாறியிருக்கிறது. இது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையாகும். இந்த வெற்றியானது பாலஸ்தீனத்தின் தனி நாட்டுக்கான போராட்ட பாதையில் பெறுமதியான நகர்வாக அமைகிறது.

மேலும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணாமாக பாலஸ்தீன மக்கள் மத்தியில் தோன்றிய பதட்டமான நிலையில் பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதியாகவுள்ள மஹ்முட்அபாசும் ஏதாவது செய்தாக வேண்டிய நிலை இருந்ததை மறுக்க முடியாது. தற்போது இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதன் மூலம் அப்பாசின் செல்வாக்கு காப்பாற்றப்பட்டுள்ளது எனலாம்.

இது இவ்வாறு இருக்க அமேரிக்கா, இஸ்ரேல், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இந்த விடயத்தில் தமது காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க பெரும் முயற்சியை மேற்கொண்டன. இதன் பலனாக 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்கா, ஜேர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. எனினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 138 நாடுகள் வாக்களித்ததன் மூலம் தீர்மானம் பாலஸ்தீனத்திற்கு சாதகமாக வெற்றியில் முடிந்தது.

அடுத்ததாக தனி நாட்டுக்கான இலக்கிலும் பாலஸ்தீனம் வெற்றியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறலாம். - என்.ஜீவேந்திரன்


Friday 11 June 2010

இந்தியாவின் போலி ஜனநாயகம்

இந்தியாவின் போலி ஜனநாயகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது போபால் வழக்கின் தீர்ப்பு. இரு நாட்களில் மட்டும் 20 000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, ஆயிரமாயிரம் மக்கள் சித்தரவதைக்கு உட்பட்டு மெது மெதுவாக செத்துக்கொண்டிருக்கும் ஒரு படு பாதக செயலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை பார்க்கையில் அதிச்சியடையாதோர் இருக்க முடியாது.

அதுவும் 1984 ஆம் ஆண்டு நடந்த கொடூரத்திற்கு வேண்டுமென்றே 26 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்திய நீதி(?) வழங்கப்பட்டிருக்கிறது.

இது ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் காறி உமிழப்பட்ட ஒரு தீர்ப்பு மட்டுமல்ல, இதற்கு காரணமாக தாங்கள் நம்புகின்ற தமது சொந்த அரசியல் தலைவர்களே இருக்கிறார்கள் என்ற மிக மிக வெட்கக்கேடான விடயத்தை வெளிப்படுத்துவதும் ஆகும்.

பச்சை வேட்டை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தனது சொந்த மக்களையே வேட்டையாடுகின்ற இந்திய ஆட்சியாளர்கள், 26 வருடங்களுக்கு முன்பு போபாலில் தனது சொந்த மக்களான 20 000 பேரின் உயிரை குடித்த அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைவர் மற்றும் அதிகாரிகளையும் பாதுகாத்திருக்கின்றனர் . அதனூடாக அவர்கள் தம்மையும் பாதுகாத்துக்கொண்டனர். காரணம் இந்த கொடுமைக்கு அமெரிக்க நிறுவனம் மட்டுமல்லாது இந்திய ஆட்சியாளர்களும் மிக முக்கிய காரணமாகும்.

அத்தோடு இந்த துயரத்திற்கு அமெரிக்க நிறுவனத்தை விட இப்போது ஆட்சியில் உள்ள அதே காங்கிரஸ் கட்சிதான் அப்போதும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தையும் காந்தியத்தையும் வரித்துக்கொண்டதாக இன்றும்கூட மக்களை ஏமாற்றி வருகின்ற காங்கிரசின் பணநாயகத்திற்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

விபத்து நடந்த ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்த குற்றத்திற்கு உடந்தையாக அவரும் அவரது சகாக்களும் இருந்தமை தெளிவான ஒன்றாக உள்ளது. பாரிய அளவில் லஞ்சப்பணம் கைமாறப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான டேவிட் அன்டசன், ராஜீவ் காந்தியால் பாதுகாக்கப்பட்டமையும், வழக்கில் தலையீடு செய்தமையும் இன்று சம்பந்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

01. இவ்வாறான அதி அபாயகரமான தொழிற்சாலை மக்கள் குடியிருப்புகளிருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதி கவனத்தில் கொள்ளப்படவில்லை.

02. விபத்துகளுக்கான சாத்தியம் தொடர்பில் முறையாக கண்காணிக்கப்படவில்லை.

03. விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், விபத்து நடந்தால் செய்யப்படவேண்டியவை குறித்து உரிய நடவடிக்கைகள் இருக்கவில்லை.

04.விபத்து நடந்தவுடன் நிறுவனத்திற்கு பொறுப்பான அமெரிக்கரான டேவிட் அன்டசன் பிணையில் வெளிவர வரக்கூடியவாறு, அதுவும் ஒரு ஒரு சம்மன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

05. டேவிட் அன்டசன் ராஜீவ் காந்தியின் உத்தரவுடன் போபாலில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

07. இவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக டேவிட் அன்டசன் இருந்த போதும் இதுவரை அவரை நாடுகடத்தும் படி இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவை நிர்ப்பந்திக்கவில்லை (அப்படி செல்லும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் டேவிட் அண்டசனின் உல்லாச விடுதியில் அவருடன் மது அருந்தி உல்லாசமாக இருந்தமை ஊடகங்களால் பிரித்தானிய ஊடகத்தால் வெளிப்படுத்தப்பட்டது)

08. யூனியன் கார்பைட் (அமெரிக்கா 50.9% / இந்தியா 49.1%) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்பாரில் என்ற பூச்சி மருந்தை மிக செலவு குறைந்த ஆனால் அபாயகரமான மீதைல் ஐசோசயனேட் என்ற நச்சுப்பொருளைப் பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

09. வெடி பொருட்கள், நச்சுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை கையாள்வது, கட்டுப்படுத்துவது தொடர்பில் உள்ள இருபதுக்கும் மேலான சட்டங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

10. தொழிற்சாலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு முறையான கல்வி, நடைமுறைப்பயிற்சி, ஆபத்து குறித்த விளக்கம், விபத்து தவிர்ப்பு போன்றன குறித்து உரிய முறையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

11. விபத்தின் பிறகு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த வழக்கு பிரிவு ராஜீவ் காந்தியின் அழுத்தத்தால் மத்திய அதிகாரிகளின் வேண்டுதலுடன் மனிதர்களை படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 304 இலிருந்து சாதாரண சாலை விபத்து போன்றவைகளுக்கு பயன்படுத்தும் 304 ஏ சரத்துக்கு மாற்றப்பட்டது.

12. வழக்கு வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்திக்கு பிறகும் முதலாளிகளையும் பெரும் தனவந்தர்களையும் பாதுகாக்கும் கவசமாக இயங்கி வருகின்ற காங்கிரஸ் கட்சி இந்த வழக்கு தொடர்பிலும் அவ்வாறே செயற்பட்டது / செயற்பட்டு வருகிறது.

பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு போபால் விஷவாயு வழக்கில் தலையிட்டு ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என சிபிஐக்கு உத்தரவிட்டது. போபால் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பு மன்மோகன் சிங்கை சந்தித்த போது யூனியன் கார்பைட் பற்றி என்னுடன் பேச வேண்டாம் என்று அவர்களை வெளியேற்றியதை தெஹல்கா அம்பலப்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியும் மன்மோகன் சிங்கும் இந்த வழக்கை மீளப்பெறுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அது இடதுசாரிகளின் எதிர்ப்பினால் சிக்கலான நிலையில் தண்டனையை மிக குறைந்ததாக மாற்றியமைத்துள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசு 1984-ல் யூனியன் கார்பைட் நிறுவனத்திடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டிருந்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் சற்றும் குறைந்த கட்சியாக இல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் காலப்பகுதியில் 1999-ல் 450 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக ஏற்றுக்கொண்டது.

போபால் கொடூரத்தால் சொல்ல முடியாத இழப்பு எற்பட்டுள்ள போதும் யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியுள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எவரெடி மின்கலங்களை தயாரிக்கின்ற இந்த நிறுவனம் ராஜ மரியாதைகளுடன் அரசியல் செல்வாக்குடன் இயங்கி வருகிறது. மேலும், இந்த டௌ கெமிக்கல்ஸ்காகத்தான் சிபிஎம் அரசு நந்திகிராமில் மக்களை கொன்றொழித்தனர்.

இத்தனை கொடுமைகளுக்கும் இடையே விபத்து இடம்பெற்ற பிரதேசம் இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. அங்கிருக்கும் நச்சுப்போருட்கள் தினந்தோறும் மண்ணோடு கலந்து வருகிறது. நீர் மாசுபட்டு வருகிறது. இதனை சுத்தம் செய்வதற்கு கூட டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இன்று வரை மறுத்து வருகிறது. இவாறான ஒரு கேவலமான நிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் சூழல் பாதுகாப்பாளர்கள். டௌ கெமிக்கல்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமது சொந்த மக்களை இந்திய ஆட்சியாளர்கள் விற்று விட்டனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கனவே ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் தொடர்ந்து நரவேட்டை நடத்தி வருகிறது.

ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தமது சொந்த வாழிடங்கள் பறிபோவதை எதிர்க்கும் மக்களை பச்சை வேட்டை எனும் பெயரில் வேட்டையாடி வருகிறது. இதுவரை இற்கும் மேட்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மக்கள் அழிவை நியாயப்படுத்தி வருகின்ற இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “வேதாந்தா” நிறுவனத்தில் சட்ட ஆலோசகர் என்பதும், அந்நிறுவனத்தில் மறைமுகமாக பணி புரிபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இடது சாரி அமைப்புகள் இவ்வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றில் மென் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் 1996-ல் படுகொலை குற்றமாக கருதவேண்டிய [culpable homicide ] குற்றத்தை கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் [death by negligence ]என மாற்றி ஆணையிட்டதே உச்சநீதிமன்றம்தான். எனவே பணத்தால் கட்டுப்படுத்தப்படுகின்ற இந்திய நீதிமன்றில் இதற்கு நீதி கிடைப்பது சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை.

இந்திய ஜனநாயகம் பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இது ஏழைகளுக்கான ஜனநாயகம் அல்ல. இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக, சட்ட, நீதி, நிர்வாக சார்ந்த நிறுவங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கானது, இந்த இந்திய ஜனநாயகம் என்பது ஒரு போலி ஜனநாயகம் என்பது மீண்டும் ஒருமுறை இந்திய மக்களின் முகத்தில் காறி உமிழ்ந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday 10 June 2010

பரதேசி ஞாநியும் பன்னாடை விமர்சனமும்

போர் குற்றம் புரிந்தமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்சே அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் தான் குற்றவாளியாகும் சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காக பல கண் துடைப்பு நாடகங்களை நடத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை இலங்கையில் நடத்துவது. இதன் மூலம் இலங்கையை அமைதியான, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நாடாகவும், படுகொலைகளே நடக்காத சுத்தமான பூமியாக தி‌ரித்து‌க் காட்டவும் அது முயன்றது. இதன் காரணமாகவே தமிழ் திரையுலகமும், தமிழ் அமைப்புகளும், வைகோ, சீமான், நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் இலங்கையில் திரைப்பட விழாவை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தங்களது போராட்டங்களின் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்தனர். திரைப்பட விழா பெருத்த தோல்வியில் முடிந்தது.

இது தமிழகத்திலுள்ள சில அறிவு‌‌ஜீவிகளுக்கு மாறாத அ‌‌ஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சகர் ஞாநி வார இதழ் ஒன்றில் திரைத்துறையின‌ரின் புறக்கணிப்பை கண்டித்து எழுதியிருக்கிறார். போர் மனிதர்களை பி‌ரிக்குமாம், கலைதான் ஒன்றிணைக்குமாம். தமிழ் திரைத்துறையினர் இலங்கை போய் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமாம். ஆனால் அப்படி செய்யாமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்களாம்.

மனசாட்சியை முன்னிறுத்தி இதேபோல் காருண்யத்தின் மடையை ஞாநி அந்த கட்டுரையில் எக்கச்சக்கமாக திறந்திருக்கிறார். அவை பற்றி மேலும் குறிப்பிடுவதற்குமுன் ஞாநியின் விமர்சன முறை பற்றியும் ஈழப் பிரச்சனையில் அவரது மனநிலை எத்தகையது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ILE இசை விமர்சகர்கள், சினிமா விமர்சகர்கள், அரசியல் விமர்கர்கள் என்று தனித்தனியே இருக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த துறையில் வல்லுனர்களாக இருப்பார்கள். ஆனால் ஞாநி ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிப்பவர். இதன் காரணமாக அவரது விமர்சனத்தில் தனி மனித விருப்பு வெறுப்பு எப்போதும் துலக்கமாகவே வெளிப்படும். ஈழப் பிரச்சனையே அதற்கு ச‌ரியான உதாரணம்.

இதே வார இதழில் சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி வி‌ரிவாக எழுதியிருந்தார். கட்டுரை அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

சென்னை குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பேசும் போது எதற்கு தேவையில்லாமல் ஈழம் குறித்துப் பேசுகிறவர்களை இழுக்க வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனை பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை மடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனை பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும். ஏன் ஞாநி கூட உள்ளூர் பிரச்சனைகள் எத்தனையோ முடிக்கப்படாமல் இருக்கும் போது வெளிநாட்டு பிரச்சனைக்கு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆக, அவரது நோக்கம் உள்ளூரா வெளியூரா என்பதல்ல. ஈழம் ஞாநிக்கு அலர்‌ஜி. அது குறித்துப் பேசுகிறவர்களை எப்படியேனும் மட்டம்தட்ட வேண்டும். மேலே சொன்ன கட்டுரையில் வெளிப்பட்டது இந்த மனநிலைதான்.

ஈழம் குறித்து பேசுகிறவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்பதான தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி, அவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்க வேண்டும் என்பதே ஞாநியின் நோக்கம். காரணம் ஈழப் பிரச்சனையில் அவர் தமிழர்கள் சார்பாக நிற்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஈழப் போராளிகளை முன்னிறுத்தி ராஜபக்சேயின் படுகொலைகளை மறைக்கும் ஒரு படுதாவாகவே அவரது பேச்சும் எழுத்தும் இன்று வரை இருந்து வந்திருக்கிறது. இதற்காக அவர் தனது உய‌ரிய கொள்கைகள் எனக் கருதுகிறவற்றையே காலில் போட்டு மிதிக்கவும் தயங்கியதில்லை.

உதாரணமாக, சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பாராட்டி எழுதிய ஞாநி, அரசியல் கருத்து வேற்றுமை உள்ள இருவர் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பரஸ்பரம் நலம் விசா‌ரிப்பதும் ஆரோக்கியமான செயல் என்று கூறி, அப்படியில்லாத திராவிட கட்சி தலைவர்களை குட்டவும் செய்தார்.

அதே ஞாநி, ஜெகத் கஸ்பர் பாதி‌ரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ‘ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்ப‌ரின் புலி ஆதரவு கொள்கையை ஆத‌ரிக்கிறாரா?’

சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசா‌ரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத் கஸ்பர் விஷயத்தில் மட்டும் நீ யார் பக்கம் என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?

ஏனென்றால் ஈழமும் ஈழப் போராளிகளும் ஞாநியால் சகித்துக் கொள்ள முடியாதவை. எத்தனை முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம், நலம் விசா‌ரிக்கலாம். ஆனால் ஈழத்தை ஆத‌ரிப்பவன் என்றால் மட்டும் அவனுடன் யாரும் பேசக்கூடாது, பழகக் கூடாது, ஒரே மேடையில் தோன்றக் கூடாது. இதற்கு பெயர்தான் நவீன தீண்டாமை.

மேலே உள்ள ஞாநியின் இரு கருத்துகளுமே ஈழம் எத்தனை தூரம் அவருக்கு அலர்‌ஜி என்பதை உணர்த்திவிடுகின்றன. இதன் எதிரொலிதான் திரைப்பட விழாவை புறக்கணித்த திரையுலகினரை மனசாட்சியில்லாதவர்கள் என்று ஞாநி சாடியிருப்பதும்.

மனித மனங்களை பி‌ரிப்பது அரசியல், ஒன்றிணைப்பது கலை என்று தனது கட்டுரையில் உருகியிருக்கிறார் ஞாநி. இதில் வேடிக்கை என்னவென்றால் ஞாநி வக்காலத்து வாங்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி கலையையே பி‌ரித்து ஒரு அசிங்கத்தை பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி என்று பெயர் இருந்தாலும் இந்தி திரைப்படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் விருது வழங்குவார்கள். இந்தியாவில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டி, கன்னடம், வங்கம் என பிற மொழிகளை அவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை. இந்தியா என்றால் அவர்களுக்கு இந்தி மட்டும்தான்.

இந்திய மொழிகளையே மதிக்கவும், இணைக்கவும் தெ‌ரியாத ஒரு திமிர் பிடித்த அகாதமியின் முதுகில் ஏறி சிங்களவனையும், தமிழனையும் ஒன்றிணைக்க வேண்டுமாம். உளறலுக்கு ஒரு அளவில்லையா?

இறுதிகட்டப் போரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கு என்ன காரணம்? ராஜபக்சே அரசு மற்றும் புலிகளின் தவறான அரசியலே காரணம் என்று எழுதுகிறார் ஞாநி. புலிகளை முன்னிறுத்தி கொலைகாரன் ராஜபக்சேவை எப்படி காப்பாற்றுகிறார் பாருங்கள். திரைப்பட விழாவுக்கு செல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று இரண்டு பக்கம் கண்டிப்பவர், ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்தவனை ஒரே வ‌ரியில் தாண்டிச் செல்கிறார். இதுதான் அறிவு‌‌ஜீவி ஞாநியின் மனசாட்சி.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதும் நாம் கி‌ரிக்கெட் விளையாடினோம், இப்போது மட்டும் ஏன் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்று இன்னொரு வக்காலத்து. ஐயா, நாம் இப்போதும் இலங்கையுடன் கி‌ரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோது அமிதாப்பச்சன் பாகிஸ்தானில் டான்ஸ் ஆடினாரா என்பதுதான் எங்கள் கேள்வி? இல்லை, மும்பையில் கசாப் தாக்குதல் நடத்திய ஓராண்டு நிறைவு விழாவை பாகிஸ்தானில் விருது விழா நடத்தி கொண்டாடுவார்களா? அதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று எந்த விமர்சகனாவது எழுதுவானா?

எத்தனை பெ‌ரிய யுத்தம் நடந்தாலும் கலைஞர்களு‌ம், விளையாட்டு வீரர்களும் கலாச்சார ப‌‌ரிவர்த்தனை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று எழுதுகிறார் ஞாநி. நிறவெறி காரணமாக பதக்கத்தை ஆற்றில் எறிந்த முகமது அலியும், அதே நிறவெறி காரணமாக விளையாட்டுத் துறையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்ட தென் ஆப்பி‌ரிக்காவும் இந்த அறிவு‌‌ஜீவியின் நினைவுகளிலிருந்து மறந்து போனது துரதிர்ஷ்டம்.

சிங்களவனுக்கும், தமிழனுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று மாய்ந்து போய் எழுதுகிறார் ஞாநி. இந்த நல்லுறவு கோஷம் ஒரு கொலைகாரனையும், பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்த ஒரு படுபாதக நிகழ்வையும் சாமர்த்தியமாக மறைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

போலீஸ்காரர் ஒருவனிடம் நீ பணத்தை திருடினாயா என்று கேட்பதற்கும் திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வியில் அவன் திருடன் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரண்டாவது கேள்வியில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதன் மூலம் குற்றம் சாற்றப்பட்டவன் நான் திருடனில்லை என்று மறுப்பதற்கான சாத்தியத்தை போலீஸ்காரர் நிராக‌ரித்துவிடுகிறார்.

ஞாநி போன்றவர்களின் சிங்கள, தமிழர் நல்லுறவு கோஷமும் இத்தகையதே. நல்லுறவைப் பற்றி கூக்குரல் இடுவதன் மூலம் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கெதிரான நீதி எங்கே என்று கேட்கும் குரல்களை தாண்டிச் செல்லப் பார்க்கிறார்கள். கொலைகளைப் பற்றியும், கொலைகாரனைப் பற்றியும் பேச முன்வராதவர்கள் கலை பற்றியும், நல்லுறவு பற்றியும் பேச தகுதியில்லாதவர்கள்.

ஞாநி தனது கட்டுரையில் ஈழத் தமிழர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கவில்லை, அதேநேரம் சிங்களவர்கள் உலகத்தரமான படங்களை இயக்கியிருக்கிறார்கள், கண் தானம் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார். சமீபத்தில் இலங்கை சென்று வந்த விமர்சகர் அ.மார்க்ஸ் இதே வார இதழில் எழுதியிருந்த கட்டுரையில், சோழர்களால் இடிக்கப்பட்ட புத்தவிகாரை பார்க்க முடியவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.

பிள்ளைக்கறி சாப்பிடுகிற ஒரு கொலைகாரனைப் பற்றி பேசும் போது, இல்லையில்லை அவன் நன்றாகப் பாடக் கூடியவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதையேதான் இந்த அறிவு‌‌ஜீவிகளும் செய்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியத‌ற்கு நாம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகள் சர்வதேச சமூகத்தின் முன்பாக நிறுத்தக் கூடிய சந்தர்ப்பம் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் பிள்ளைக்கறி தின்பவனின் குரல்வளத்தை மெச்சுவதும், உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அவனது கோயிலை இடித்தான் என்பதும் எத்தகைய சந்தர்ப்பவாதம்?

ஹிட்ல‌ரின் படையால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை பற்றி பல நூறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று ஸ்டீவன் ஸபீல்பெர்க் இயக்கிய சிண்ட்லர்ஸ் லிஸ்ட். இந்தப் படத்தில் யூதர்களின் படுகொலைகள் கச்சிதமாக சித்த‌ரிக்கப்பட்டிருந்தது. வரலாறை ஸ்பீல்பெர்க் மறு உருவாக்கம் செய்திருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெளிவந்த போது பல அறிவு‌‌ஜீவிகள் படத்தை எதிர்த்தனர்.

யூதர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படம் வெளிவரும் போது நிலைமை மாறிவிட்டது. யூதர்கள்தான் இன்று பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொடூரமான ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் யூதர்கள்பால் கருணை ஏற்படுத்தும் சிண்ட்லர்ஸ் லிஸ்டை ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். சுருக்கமாக ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு ஆன்ம பலம் தராதீர்கள்.

இந்த அறிவு வெளிச்சம் நமது அறிவு‌‌ஜீவிகளுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எதி‌ரியின் கருணையை நம் மீது பீய்ச்சியடிப்பதன் மூலம் நடந்த படுகொலைக்கான நீதியை இவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எதி‌ரியின் நல்ல அம்சங்களை பட்டியலிடுவதன் மூலம், பார் நான் எவ்வளவு நடுநிலையான விமர்சகன் என்று மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் மார்தட்ட கொடுக்கப்படும் விலை எத்தகையது என்பதை அறிவு‌‌ஜீவிகள் உணர வேண்டும்.

தமிழ் அமைப்புகளும், தமிழ் திரையுலகமும் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் பலன்களும் காலத்தின் கட்டாயம். அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் ஒவ்வொரு கலைஞனும், தமிழனும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழனுக்கு நேர்மையான அஞ்சலியை செலுத்தியிருக்கிறான். இந்த அஞ்சலிதான் ஒவ்வொரு தமிழனின் ஆகச் சிறந்த மனசாட்சியாக இருக்க முடியும்.

நன்றி - வெப்துனியா

Monday 7 June 2010

மக்களுக்கு எதிராக புலிகளும் இராணுவமும்

வன்னியில் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் மீது புலிகளும் இராணுவமும் அடக்கு முறைகளையும், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியா வடக்கு, மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில் மக்கள் சிறு சிறு பகுதிகளில் துண்டு துண்டாக குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரில் அதிகளவான மக்களும் முல்லைத்தீவில் குறைவான மக்களும் குடியமர்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் இன்றுவரை முகாம்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள். கண்ணி வெடிகள் அகற்றப்படாமை காரணமாகவே இம் மக்கள் குடியமர்த்தபடாமல் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் எவ்வித அவசரமும் காட்டப்படவில்லை. இந்திய ராணுவமும் இலங்கை இராணுவமும் சேர்ந்து இவற்றை அகற்றி வருவதாக செய்தி ஊடகங்களில் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான பலனை காண முடியாமல் உள்ளது. வேண்டுமென்றே மக்கள் மீள குடியமர்வதை அரசாங்கம் தாமதிக்கிறது என்றே இங்கு வன்னியிலுள்ள மக்கள் நம்புகிறார்கள்.

அதற்கு ஏற்றால் போல வன்னியின் பல பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டி எழுப்பபடுகின்றன. பல பிரதேசங்களில் பாகங்களாக பொருத்தி அமைக்கின்ற வீடுகளுக்கான கட்டுமானப்பொருட்கள் பெருமளவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இவை யாருக்காக என்ற கேள்வி மக்கள் மனங்களில் உள்ளது. இவற்றை இரண்டு நாட்களில் பொருத்தி வீடுகளை அமைத்து விடலாம். ஆனால் இவை மக்களுக்கு வழங்கப்படுகின்றவை அல்ல. இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு என்ற போர்வையில் வன்னியில் பாரிய அளவில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தவே திட்டங்கள் தீட்டப்படுவதாக தெரிகிறது.

மக்களை பொறுத்தவரை வெகு சிலருக்கு இந்தியாவினால் தகடுகளும் சீமெந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு எவ்வித கட்டுமானப் பொருட்களும் வழங்கப்படவில்லை. தொழில் செய்வதற்கு எவ்வித ஏற்பாடுகளும், உதவிகளும் இல்லாத காரணத்தால் மக்களிடம் பணமும் இல்லை. எனவே மிகப்பெரும்பாலான மக்கள் சிறு சிறு குடிசைகளை அமைத்துக்கொண்டு நீர், மின்சாரம், முறையான போக்குவரத்து என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் விடப்பட்டுள்ளனர்.

அவர்களது குடிசைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் பத்தடி தூரத்திலேயே கண்ணி வெடிகளும், ஏவுகணைகளும், வெடிக்காத ஏனைய வெடிபொருட்களும் தாராளமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றை தாண்டியே தண்ணீர், விறகு போன்றவற்றை சேகரிக்க வேண்டியுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இம் மக்களது குழந்தைகள் இந்த வெடி பொருட்கள் உள்ள சூழலில்தான் வசிக்கின்றனர். அவர்கள் எவ்விதம் இந்த கண்ணி வெடிகள், ஏனைய வெடி பொருட்களை இனம் காண முடியும்? தெரிந்தே அவர்கள் அவ்விதம் விடப்பட்டு இருக்கிறார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே மிக கொடுமையான போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி வந்தவர்களே இந்த மக்கள். கிளிநொச்சி வரை புலிகள் தந்திரமாக பின்வாங்குவதாக நம்பி அவர்களுடன் விரும்பியே இந்த மக்கள் சென்றனர். எனினும் கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்கள் அங்கிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லவே விரும்பினர். ஆனால் அதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை.

கடுமையான காயம் அடைந்தவர்கள் கூட வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் யுத்தம் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு உக்கிரமடைந்த போதும் கூட புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. புலிகளை மீறி சென்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். அதே போல அங்கிருந்து தப்பி சென்றவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றார்கள்.

கடைசி நாட்களில் பெருமளவில் வெளியேறிய பொது மக்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் தப்பிச்சென்ற பெரும்பாலானவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட அவர்களது உடலங்களை கடற்படை வள்ளங்களில் கொண்டு சென்று கடலில் கொட்டியுள்ளனர்.

கடைசி நாட்களில் 30 000 வரையான பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்த மக்கள், போராளிகள் என 27 000 இற்கும் மேற்பட்டோர் குற்றுயிருடன் புதைக்கப்பட்டார்கள். வாகனங்களில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வாகனத்தோடு தகர்க்கப்பட்டார்கள். ஒரு குறுகிய சிறு பிரதேசத்துக்குள் வாழ்ந்த மக்கள் மீது பல்குழல் பீரங்கிகள் குண்டுகளை பொழிந்தன.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஆண்- பெண் பிள்ளைகள் புலிகளால் பலவந்தமாக கதறக்கதற கடத்தி செல்லப்பட்டு அவர்களது கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. தமது பிள்ளைகளை பாதுகாக்க முயன்ற பெற்றோர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டார்கள் இதிலிருந்து தப்புவதற்கு பெற்றோர் சிறுமிகளைக்கூட திருமணம் செய்து வைத்தனர். ஆனால் போர் உக்கிரம் அடைய அனைவரும் பலாத்காரமாக இழுத்துச்செல்லப்பட்டனர்.

போர் முடிவடைய ஓரிரு நாட்கள் இருந்த போது கூட இளம்பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு அவர்களது தலை முடியை புலிகள் கத்தரித்துள்ளனர். இதன் பலன் ஒன்றுமறியா அப்பாவி பெண்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி புதைக்கப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் சிறைகளில் வாடுகிறார்கள்.

இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டு தமது போராட்ட அர்ப்பணிப்பை காட்டிய புலி உறுப்பினர்கள் தற்போது இராணுவத்துடன் இயங்கி தமது விசுவாசத்தை காட்டி வருகிறார்கள். அதிலும் கொஞ்சம் சிங்களம் பேசத்தெரிந்த புலிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். சரணடைந்த இந்த சில நூறு புலி உறுப்பினர்கள் தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் தமது விசுவாசத்தை நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே போராளிகளையும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்களையும் காட்டிக்கொடுப்பது இவர்களது பணியாக உள்ளது. தனிப்பட்ட கோப தாபங்களும் தீர்த்துக்கொள்ளப்படுகிறது.

மக்கள் மீள குடியேறிய பகுதிகளில் அதிகளவில் கொள்ளை, குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெயாத நபர்கள் அங்கிருந்த கணவன் மனைவியை வாளினால் வெட்டியும், துப்பாக்கியினால் சுட்டும் துன்புறுத்தி அங்கிருந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதில் மனைவியான விக்னேஸ்வரியின் கை துண்டிக்கப்படும் நிலையில் காணப்பட்டதுடன் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. கணவனான இராசலிங்கத்திற்கு வயிற்றுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை விடக்கொடுமையாக மீளக்குடியேறிய மக்கள் மீது இராணுவம் பாலியல் கொடுமைகளை புரிந்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கு காட்டிக்கொடுக்கும் புலிகள் உதவி வருகிறார்கள்.

விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது 6 இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விசாரணைகள் வழமை போல மூடி மறைக்கப்பட்டு விடும் என்பதை பலரும் அறிவார்கள்.

கண்ணி வெடியகற்றல், வேலிகட்டல், வீடு கட்ட உதவுதல் போன்றவற்றிட்கு சில இராணுவத்தினர் உதவி செய்கின்றனர். ஆனால் அவ்வாறு பகலில் நோட்டமிடுகின்ற சில இராணுவத்தினர் இரவில் பெண்கள் மீது வன்கொடுமை புரிகிறார்கள். இதில் இராணுவத்தினருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த புலிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

சரியோ பிழையோ தலைமை இருக்கும் போது கட்டுப்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது மிக மோசமான கொடுமைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் புலிகள் என இவர்களால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை எடுத்துச்சொல்ல அமைப்புகளோ, செய்தி ஊடகங்களோ அங்கு இல்லை. போக்குவரத்து ,மின்சாரம் போன்ற வசதிகள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்? எங்கு தப்பிச்செல்ல முடியும்?

எதிரி, சிங்களவன் என்று சொல்லப்பட்டவர்கள்தான் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், எங்களுக்கு ஈழம் பெற்று தருவதாக சொன்னவர்களுமா கொடுமைப்படுத்த வேண்டும்?

கார்த்திகேசு ஜெயகாந்தன்

Friday 21 May 2010

கூர்க்காலாந்து சகோதரப்படுகொலை? மதன் தமாங் கொல்லப்பட்டார்

இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது சிலிகுரி கூர்கக இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்தியா ஒடுக்கபப்டுகிற மக்களை வஞ்சிப்பது போலவே கூர்க்கா இன மக்களையும் நீண்டகாலமாக ஒதுக்கி வைத்துள்ளது. இந்து சாதி அமைப்பினுள் அனுமதிக்காத கூர்க்கா இன மக்கள் நீண்டகாலமாக கூர்காலாந்து தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களை இந்திய உளவு நிறுவனம் தன் உளவுவாளிகளால் சிதைத்து வந்து வரலாறும் உண்டு.

இந்நிலையில் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியின் தலைவராக மதன் தமாங் செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் மதன் தமாங் தனது கட்சி மாநாடு ஒன்றையும் பேரணி ஒன்றையும் டார்ஜிலிங்கில் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று காலை மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட தனது கட்சியினரோடு சென்ற மதன் தமாங்கை மர்ம நபர்கள் கூரிய கத்தியாலும் தடிக்கம்புகளாலும் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து மரணமடைந்தார். மருத்துவமனைக்குச் எடுத்துச் செல்லும் வழியிலேயே மதன் தமாங் மறைந்ததாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் கூர்காலாந்து பகுதி முழுக்க கடுமையான பதட்டம் நிலவுகிறது. சிலிகுரி, டார்ஜிலிங் பகுதிகள் இக்கொலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருக்கிறது.

கூர்காலாந்து மாநிலக் கோரிக்கைக்காக பல அமைப்புகள் போராடி வந்தாலும் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியும், கூர்கா ஜனமோர்ச்சாவும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கட்சிகளிடையே அரசியல் ரீதியான மோதல்கள் இருந்தாலும் இரு கட்சிகளுமே கூர்க்காலாந்து கோரிக்கையை முன் வைத்தே போராடி வருகின்றன. இந்நிலையில் இந்திய கூர்க்கா லீக்கையும் அதன் தலைவர் மதன் தமாங்கையும் பிடிக்காத கூர்க்கா ஜன மோர்ச்சாவே இக்கொலையை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஈழத்தில் சகோதரப்படுகொலைகளால் போராட்டத்தை பல வீனமாக்கியது போல கூர்க்காலாந்திலும் சகோதரப்படுகொலைகளை ஊக்குவிக்கிறது இந்தியா.

நன்றி - இனியொரு (http://inioru.com/?p=13039 )

Tuesday 18 May 2010

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்?

மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று.

ஓரிரண்டு தசாப்த காலங்களாக உலகின் பார்வை தென்னாசியா மீது திருப்பி வைத்திருந்தவர்கள் புலிகள் என்பதையும், அதன் தலைவர் பிரபாகரன் ஒரு ஆளுமை நிறைந்த மனிதராக அப்பொழுதில் பார்க்கப்பட்டார் என்பதும் எதிரிகள் கூட ஏற்கிற ஒரு யதார்த்தம்.

அவ்வாறான நிலையிலிருந்த விடுதலைப்புலிகள் இன்று வட-கிழக்குப் பிரதேசங்களில் முற்றாக இல்லை என்பதோடு, அடுத்த தலைமைக்கான ஒருவரை விட்டுவைக்காது முற்றாக எல்லாருமே அழிந்து போனார்கள் என்பது ஏற்பதற்கு சற்றுக்கடினமான உண்மை.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துத் தளபதிகளுமே ஏதோ ஒரு நம்பிக்கையின் பிரகாரமே முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றார்கள். உயிரைக் கொடுத்துப்போராடினார்கள். ஆனால் அவர்களின் மரணத்தில் மகிழ்பவர்களாய் அவர்களிற்கு இறுதிவரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த புலிகள் இன்று மாறிவிட்டார்கள்.

ஏனென்றால் பிரபாகரனும் அவரது படைக்கட்டுமானமும் நினைவு கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்களின் வாரிசுகளாக அறிவித்து ஐரோப்பாவில் பதுங்கியிருப்பவகேளே மறைக்கிற ஒரு கொடிய நேரப் பதிவு இது. தங்களது தலைவன் என்றல்ல ஒரு சிறந்த போராளியென்றாவது அல்லது கொண்ட கொள்கைக்காக உயிர் மாண்ட ஒரு மனிதன் என்ற மரியாதைக்காவது கௌரவிக்கப்பட வேண்டிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்த தொண்டர்களாலேயே பிரபாகரனின் மரணமும், பிரபாகரனியமும் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் அற்ற ஒரு குழுமமாக எதிராளிகளால் வர்ணிக்கப்பட்ட புலிகள் அவ்வாறானவர்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்த பல தமிழர்களையும் மாற வைக்கிற அளவிற்கு இவர்களது இப்போதைய உள்ளக மோதல்கள் வியாபித்திருக்கின்றன.

எந்த ஒரு போரிலும் வன்மமாகப் போராடும் விடுதலைப்புலிகள் இந்த ஈழப்போர் நான்கில் செய்மதித் தொலைபேசியூடாகக் கதைத்தபடி, தங்களின் புலம்பெயர்ந்த தொடர்புகளின் அறிவுறுத்தல்களின் படி போராடினார்கள். அதுவே அவர்களின் முடிவுரையெழுதலாகவும் அமைந்து விட்டது.

இந்தத் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் மேற்குலக நாடுகளின் பேரிலான கற்பனாவாதத்தை விடுதலைப்புலிகள் மத்தியில் விதைத்து விட்டதோடு தங்களது புலம்பெயர்ந்த தொடர்புகள் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் என்ற எண்ணத்தையும் வலுவாக களத்திலிருந்த புலிகளிற்கு ஏற்படுத்தியிருந்தது.

லண்டனில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். ஜேர்மனியில் 50 ஆயிரம் பேர் திரண்டனர், ரொறன்டோவில் 1 லட்சத்து ஐம்பதினாயிரம் திரண்டனர். லண்டனில் மெற்றோ போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. ஜேர்மனியில் சுரங்கப்பாதைப் போக்குவரத்துத் தடைப்பட்டது. ரொறன்ரோவில் ஹைவே மறிக்கப்பட்டது போன்ற கூப்பாடுகள் வன்னியில் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் உண்மை யாதெனில் மேற்குலக நாடுகளின் புலிகளின் வழிநடத்துனர்களின் செயற்பாடுகள் அந்த அரசாங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடைய தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இருந்த ஆதரவைக் குறைத்து அவர்களை தமிழர் விவகாரங்களிலிருந்து தனிமைப்பட வைத்தது.

இதற்கும் மேலாக ஊடக ஆதிக்கத்தைக் கொண்டிருந்த புலிகள் உண்மைகளை மறைத்து மாயை நிலையிலே புலம்பெயர்ந்த மக்களை வைத்திருந்தார். ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையிலும், பிரதேச கட்டுப்பாடு முறியடிக்கப்பட்ட நிலையிலும் வன்னித்தலைமை சொன்ன செய்திகளை புலம்பெயர் புலிகள் மக்களிடம் நேர்மையாகச் சொல்லவில்லை. முடிவு கடலை நோக்கிக் கண்ணெறிந்தபடியே செய்மதித் தொலைதொடர்பில் புலம்பெயர்ந்த தமது தொடர்புகளுடன் உரையாடிய படியே அங்கிருந்தவர்கள் புலிகளின் தலைமை களமாடி மடிந்தார்கள்.

களத்தின் உண்மை நிலையை புலத்திற்கு உரைக்காத புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளார்கள் களத்தையும் புலத்தையும் மாயையில் வைத்திருந்ததே இந்தப் போராட்டத்தின் இழப்பிற்கான முழுமுதற்காரணம். புலிகளின் பலம் தொடர்பான அதீத கற்பனையை விதைத்து விட்ட இவர்கள், 15,000 புலிகள் தாக்குதலிற்காக காட்டிற்குள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை மே மாதம் பரப்பி விட்டு விடுதலைப்புலிகள் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பொன்றை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.

இதனால் அவர்கள் பெற்ற நன்மை எதுவெனில் இறுதிநேரத்தில் கூட சேர்க்கப்பட்ட பெருமளவு நிதியேயாகும். இதுவே இன்றைக்கும் பிரபாகரன் இருக்கிறார். காட்டிற்குள் எங்கள் படையணிகள் இருக்கின்றன என்ற பொய்களை புலம்பெயர்ந்த புலிகள் பரப்புவதற்குக் காரணமாகும்.

காட்டிற்குள் ஒரு புலிகூட இல்லை. இருந்தவர்களையும் இவர்கள் அரசாங்கத்தின் கூலிகள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறி அந்நியப்படுத்தி விட்டார்கள். சிறீலங்கா கூறுவது போல ஒரு புலிகூட அங்கே இல்லை. எனவே இவர்கள் இனிப் போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்குவதற்கான தகுதியை ஒரு சிறு அளவு கூட கொண்டிராத ஒரு கூட்டமாக மாறி விட்டார்கள்.

கவனிக்க ஊடகதர்மம் பற்ற இரவுபகலாக அழுது வடிக்கும் தமிழ்நெற், பதிவு, சங்கதி போன்ற இணையத்தளங்கள் இன்றுவரை மக்களிற்கு உண்மையை மறைக்கும் தளங்களாகவே செயற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் முழு நிதிச் செயற்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிற தமிழ்நெற் இணையத்தளத்தின் பொறுப்பாளர் நோர்வே ஜெயா புலிகளின் சம்பளப்பட்டியலிலுள்ள ஒரு ஊழியர் என்பதும், தொடர்ந்து சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதுமே பிரபாகரனின் மரணத்தை இன்றுவரை அவர் மறைப்பதற்குக் காரணமாகும்.

உண்மையை மறைப்பவன் விடுதலைப்போராளியல்ல. புலிகளால் ஊதியத்திற்கு ஊதியத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழியாக புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். பிரபாகரன் இருக்கிறார் என்ற பொய்யின் மூலம் பணம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருக்கிறார்கள்.

புலத்திற்கும் களத்திற்குமான புரிந்துணர்வின்மையானனது கட்டுவதற்குக் கந்தல் துணி கூடக் கிடைக்காத ஒரு தருணத்தில், கந்தல் துணி போதும் என களம் தவிக்க, கந்தல் துணி வேண்டாம் பட்டுத்துணி வேண்டும் என புலம் அடாவடித்தனம் பண்ணியதே இந்த முள்ளவாய்க்கால் துன்பத்திற்கான அடிப்படை.

ஆயுதக்கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகளின் கப்பற்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காகவே வணக்காமண் என்ற கப்பலை அனுப்பி, சிறீலங்காக் கடற்படையின் பாதுகாப்பு வலயத்தை மேலும் பலமாக்கிய புலம்பெயர்ந்த புலிகளின் மதிநுட்பத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகளேயில்லை. இனிக்கப்பல்கள் வருவதற்கே வாய்ப்பில்லை என்றவுடன் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிற்கு உள்ளான கப்பல்கள் போக மீதி இருந்தவை ஆழ் கடலில் தமது ஆயுதங்களைக் கொட்ட பிரபாகரன் உத்தரவிடுகிற அளவிற்கு அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டுப்பிரிவினரின் செயற்பாடுகளின் பின்னடைவு இருந்தது.

கஸ்ரோ குழுமம் என்ற இந்தக் குழுவின் பேச்சை தீவிரமாக நம்பிய பிரபாகரன் அதுவரை தொடர்பாளராக இருந்த கே.பி. என்பவரை ஓரங்கட்டி விட்டு கஸ்ரோ சார் அணியிடம் வெளிநாட்டுப் பொறுப்புக்களை ஒப்படைக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகள் பற்றிய அல்லது புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பற்றிய எந்தவொரு அறிவோ அனுபவமோ இல்லாதவர்களை இவற்றைக் கவனிக்குமாறு அனுப்பபட்டதால் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள கஸ்ரோவிற்கு ஆதரவானவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. இதுவே இவர்களின் தோல்வி முகமாயிற்று.

இவர்களின் தொடர் தோல்விகளைப் பிரபாகரன் கிரகித்த போது போர் முடிவுறும் நிலையை அடைந்திருந்தது. 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கே.பியுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்து பழைய நிலையையடை பிரபாகரன் விரும்பினாலும் அதற்கான காலம் பிரபாகனிற்குப் போதாமலிருந்தது.

எனினும் மே மாதம் 8ம் திகதி விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முழுப்பழியும் கஸ்ரோ குழுமத்தின் மீதே பிரபாகரனால் சுமத்தப்பட கஸ்ரோ நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார். இது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களிற்குத் தெரியாமலே நடக்கிறது. பிரபாகரனால் போராட்டத்தின் இறுதியில் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட குழுமம் கஸ்ரோ குழுமம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறு கஸ்ரோ இறந்ததே தெரியாமல் இருந்த கஸ்ரோவின் வெளிநாட்டுத் தலைமைத் தொடர்பாளர் நெடியவன் மே 14ம் தேதி திருமதி அடேல் பாலசிங்கத்தைத் தொடர்பு கொண்டு தனக்கும் கஸ்ரோவிற்கும் கடந்த பல நாட்களாகத் தொடர்பு இல்லையென்ற தனது கவலையை வெளியிடுகிறார். அவ்வளவிற்கு அந்தக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் ஐரோப்பிய. வுட அமெரிக்க நாடுகளில் நிதி சேகரிப்பை மட்டும் நிறுத்தவேயில்லை.

மறுபுறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும் கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள் மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இது தமது நிலைமையில் ஏதோ ஒரு மாற்றம் வந்துவிட்டது என்பதை புலம்பெயர்ந்த கஸ்ரோவின் “முன்னைநாள்” தொடர்புகளிற்கு காட்டி நிற்கிறது. எனவே அவர்கள் மௌனமாக கே.பி. செய்வதைப் பார்த்தவாறு தமது நாட்களை ஓட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து கே.பி.யினால் பரிமாறப்பட்ட முக்கிய தகவல்களை பிரபாகரனிடம் பகிர்வதற்கான தொடர்பாளரான வேல் என்ற இடைநிலைத் தளபதிக்கு பிரபாகரனிடம் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறாமல் தங்களின் ஊடகவே அதனை செய்த கஸ்ரோ பிரிவின் செயற்பாடே பிரபாகரனை அதியுச்ச கோபத்திற்கு இறுதிநாட்களில் ஆட்படுத்தியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளே அவர்களை துரோகிகள் என அறிவிப்பதற்கு பிரபாகரனை இட்டுச் சென்றது.

மே 17ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த கஸ்ரோ குழுமம் தலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கஸ்ரோவின் தலைமைத் தொடர்பாளராக நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை ஓரங்கட்டுகிறது.

நெடியவன் என்பவர் ஒரு ஆளுமை நிறைந்த புலியல்ல. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களிற்கு அழைத்துச் செல்வதே அவரது தொழில். ஆவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல்வயப்பட்டதால், கஸ்ரோவின் அனுமதியோடு அவரை மனமுடித்து நோர்வேயில் வதியும் ஒரு புலி.

இவ்வாறு மணமுடித்து வெளிநாடு சென்றவரை கஸ்ரோ தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்ட அவமானம். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் புலிகளின் சொத்துக்களைப் வசப்படுத்திக் கொள்ளவும், புலிகளின் ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தலைவராக புலம்பெயர்ந்த புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

மறுபுறத்தே காலம் தனது பக்கமில்லையென்றதை பிரபாகரன் உணர்ந்த போது அவரது செல்வங்களான சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும் களப்பலியாகியிருந்தனர். சயனைட் வில்லை பலவந்தமாகப் நம்பிக்கைக்குரியவர்களால் பறிக்கப்பட்ட பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலானவர்கள் 15ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் உடைக்கப்பட்டு சென்ற கரும்புலிகள் தலைமையிலான அணியினால் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைக்க முடியவில்லை. இத்தாக்குதலில் பொட்டம்மானும் உயிரிழக்கிறார். பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்க்காலிற்குள் முடங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் பிரபாகரனும், தென்முனையில் சூசையும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த சூசை கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என. உடனே கே.பி.

படைகளையும் அரசாங்கதையும் திசை திருப்ப ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் 2000 போராளிகளும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருப்பதாக. இது அந்த இடத்தில் பிரபாகரன் இல்லை என்று நம்ப வைப்பதற்காக

ஆனால் அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார். கூடவே மதிவதனி பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் என பிரபாகரனின் சந்ததியே நேர்மையாக போரில் மடிகிறது.

கே.பி.க்கு அதன் பின்பு சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு மீண்டும் வரவேயில்லை. சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த படம் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முழுதாக முற்றுப் பெற்றது.

ஆனால் இப்போது தப்பி சிறையிருக்கும் விடுதலைப்புலிகளில் வெளியுறவுத் தொடர்பாளர் திலீபன், வேல் மற்றும் தொலைதொடர்புப் பரிவர்த்தனைப் பொறுப்பாளர்கள்; புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்தால் அவர்களால் சிறிலங்கா அரசிற்கு இணையாக யுத்தக்குற்றவாளிகள் ஆக்கப்படப்போவது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களும். ஓவ்வொரு நாடுகளிலும் தமிழ் மக்களைப் பொய் கூறி ஏமாற்றிய புலிகளின் முகவர்களுமேயாகும்.

போராட்டத்தின் முற்றுப் பெறுதலோடு தாயகத்தில் எஞ்சியிருந்த புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி தயாமோகன் உள்ளிட்ட பலர், செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி உள்ளிட்ட பலரையும் இலங்கையிலிருந்து மீட்டெடுத்த கே.பி. செய்த ஒரு செயல் அவரது முடிவிற்குக் காரணமாயிற்று. நெடியவன் அல்ல புலிகளின் தலைவர். தானே புலிகளின் தலைவர் என கே.பி. அறிவித்த மூன்றாம் நாளே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கைதியாக்கப்படுகிறார்.

இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த ஒருவர் கைதியாக்கப்படுகிறார். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் புகுவதாக புலம்பெயர் புலிகள் அறிவிக்கிறார்கள். தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் அறிவிக்கின்றனர்.

இப்போது விளங்குகிறதா என்ன நடந்தது என்று? புலிகளின் உள்ளிருந்து அறுக்கும் பகை நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அதற்கு உதாரணம் நோர்வேயில் கலவியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்கிற ஒரு சிறு பையன்.

- கீர்த்தி

- (இக்கட்டுரை ஆராய்வினால் எழுதப்படவில்லை).

நன்றி - இனியொரு ( http://inioru.com/?p=12918 )

Friday 7 May 2010

கருணாநிதி- சில கிலு கிலுப்பைகளும்…. ஒரு கருப்புக் கொடியும்

குழந்தைகளுக்கு நாம் கிலு கிலுப்பை வாங்கிக் கொடுப்போம். ஆனால் என்னதான் விசித்திரமான சதங்கள் வருகிற கிலு கிலுப்பை என்றாலும் குழந்தை சில நாட்கள் மட்டுமே கிலு கிலுப்பையை ரசித்துச் சிரிக்கும்… பின்னர் கிலு கிலுப்பை சலித்து விடும். அடுத்த பொம்மையைக் கொண்டு வந்து குழந்தைக்கு கொடுத்தால் அதோடு விளையாடத் துவங்கி விடும்.

ஆனால் வித விதமான கிலு கிலுப்பைகளை வைத்து ஒரு எண்பது வயது குழந்தைக்கு கிலுக்கம் ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையும் கொஞ்சம் கூட சலிக்காமல் காட்டப்படுகிற கிலு கிலுப்பைகளுக்கெல்லாம் பல மணி நேரம் ஒதுக்கி ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஊரெங்கும் பாராட்டு விழா, பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா என்று ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே கருணாநிதிக்கு காட்டப்படும் கிலு கிலுப்பைகளின் ஊழைச் சத்தம் தாங்க முடியவில்லை.

சமீபத்தில் ஒரு செய்தி. சில மூத்த பத்திரிகையாளர்கள் கலைஞரைச் சந்தித்தார்களாம். பெண் சிங்கம் படத்தில் வந்த வருமானத்தை மக்களுக்கு வழங்கியமைக்காகவும், இளைஞன் பட வருமானத்தை மக்களுக்கே வழங்கியதற்காகவும் இனி உங்களை கலைஞர் என்றே சொல்லக் கூடாது. வள்ளல் என்றுதான் சொல்ல வேண்டும் என பத்திரிகையாளர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனாராம் கலைஞர்.

தொடர்ந்து காட்டப்படும் இந்த கிலுக்குகளில் உள்ள ஏளனத்தைக் கூட இவர்கள் அந்த முதியவரிடம் எடுத்துச் சொல்வார்களோ என்னவோ? இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், தமிழார்வலர்கள், இலக்கியவாதிகள், என எல்லோருமே இப்படி கையில் ஆளுக்கொரு கிலுக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். ” கோவையில் நடை பெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலைஞருக்கு தொல்காப்பியர் விருது வழங்க வேண்டும்”" என்று செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்தார் தமிழண்ணல். ஆறிக்கை விட்ட மறுநாளே அவருக்கு மாநாட்டுக் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி வளைப்பது?

எப்படி துதிப்பது என்பதை எல்லாம் இந்த தலைமுறை இளைஞர்கள் இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கிலு கிலுப்பைகளின் உச்சம் என்றால் காஞ்சிபுரத்தில் நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவைச் சொல்லலாம். திமுக நடத்திய அந்த விளாவில் திமுக வருடாவடம் கொடுக்கும் விருதில் ஒரு விருதான அண்ணா விருதை திமுக தலைவர் கருணாநிதியே பெற்றுக் கொண்டார். பெற்றுக் கொண்டார் என்பதே எவ்வளவு அபத்தம் பாருங்கள். விழா நடத்தவோ, மேடை போட வேண்டிய அவசியமோ இல்லாமல் பேசாமல் அறிவாலயத்திலிருந்தே அந்த விருதை எடுத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால் அதுதான் கருணாநிதி. அதை ஒரு மாநாடு மாதிரி நடத்தி பல பேர் வேடிக்கை பார்க்க தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வார். ஆக இந்த எண்பது வயது குழந்தை. தனக்கான கிலுக்கை தானே செய்து கொள்கிறது. கருணாநிதி கிலுக்குகளை மட்டுமே விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட ஜெகத்ரட்சன் திடீரென மத்திய அமைச்சர் ஆவதில் உள்ள ரகசியமும் இதுதான், தமிழண்ணன், சிலம்பொலி செல்லப்பன். முகம் மாமணி போன்ற அல்லக்கைகள் பண்ணுகிற அலப்பறைகளின் தந்திரமும் இதுதான். விரைவில் மேலவை வர இருப்பதால் இன்னும் பல கிலுக்குகளை நீங்கள் கேட்கலாம். பார்கக்லாம்.

இடைவிடாது கேட்டுக் கொண்டே இருந்த கிலுக்குச் சதங்களுக்கிடையில் கருணாநிதிக்கு தோழர்களின் அந்தச் சத்தத்தைக் கேட்க சகிக்கவில்லை. கையில் கருப்புக் கொடியோடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களைத் தாக்கிய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு காட்டப்பட்ட கருப்புக் கொடிதான் எதிர்ப்பரசியலில் கருணாநிதிக்கு காட்டப்பட்ட முதல் எதிர்ப்புக் கிலுக்கு. இப்படியும் செய்வார்களா? இவர்கள் யார்?

ஒரு சிறு குவினர், ஐந்து, அல்லது ஆறு பேர், ஊடக விளம்பரத்துக்காக, என்றெல்லாம் பேசுகிறவர்கள்தான் கருணாநிதிக்கு வித விதமான கிலுக்குகளைக் காட்டி உற்சாகத்திலாழ்த்தியவர்கள். இதை எப்படி டீல் செய்வது என்பது தெரியாது கருணாநிதியோ உயர்நீதிமன்றத்தில் கருப்புக் கொடி காட்டிய்வர்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள், தலித் விரோதிகள் என்று பிரச்சனையை மடை மாற்றினார்.

கருப்புக் கொடியை ஆதரிப்போம்

………………………………………………………………

கருப்புக் கொடியின் வலிமை கருணாநிதிக்கும் தெரியும் பல மணிநேரங்கள் இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்துக்குள் முடக்கிய கருப்புக் கொடிகள் கருணாநிதியினுடையது. ஆனால் தேர்தல் அரசியலில் கலந்து போர் வெறி இந்திய அரசுக்கு காவடி தூக்கும் ஏவல் ஆளாக மாறிப் போன பின் கருப்பு மறைந்து மஞ்சளும் பச்சையும் பிடித்த நிறமாகிப் போனது அவருக்கு, அதனால்தான் பார்ப்பனர்களே கருணாநிதியை பாராட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதை சிலர் முதிர்ச்சி என்கிறார்கள்.

பச்சையான குடும்ப,சர்வாதிகார சந்தர்ப்பவாதத்தைத் தவிற இதில் வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்கள் மீது காட்டுமிராண்டித்தமான தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர் கருணாநிதி. அன்றைக்குப் உயர் நீதிமன்றம் போர்க்களாமான மாலையில் ஏதோ தனக்குத் தெரியாமல் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது போல பதறிய கருணாநிதி.

சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த படியே உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது. நீங்கள் விரும்பினால் நானே ஆம்புலன்சில் உங்களை வந்து நேரில் சந்திக்கிறேன் என்று கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு அன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. மரியாதையும் இல்லை அசம்பாதிவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதி விரும்பியிருந்தால் அப்போதே அவர்களை பதவியை விட்டு நீக்கியிருக்கலாம். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவருக்கு பதவியுர்வு வழங்கி கோவைக்கு அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் ஒருவர் இன்னொருவர் மீது பழியைப் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றீக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகளோ ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகளாக மாறி அடிவாங்கிய வழக்கறிஞர்களுக்கே அட்வைஸ் செய்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் இன்றுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவோ துரை ரீத்யாக நடவடிக்கைக்கோக் கூட உள்ளாகவில்லை.

ஒரு வருடம் கழிந்து விட்டது. இடையில் கருணாநிதிக்குக் காட்டப்பட்ட கிலுக்குகளில் வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்றமும் விடுபடுகிறதே என்று கருணாநிதி நினைத்து அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார். அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர் நீதிபதிகள். அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவ கருணாநிதியையே அழைப்பது என்று முடிவெடுத்தனர். உயர்நீதிமன்றத்திற்குள் கருணாநிதி நுழையக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வந்தார் கருணாநிதி. முகத்துக்கு நேர மனித உரிமை பாதுகாப்பு மையத்ச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள்.

ஆர்.சி. பால்கனகாராஜ்.

……………………………………

தங்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டி கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் திமுக ரௌடிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்க, சென்னை மாவட்ட வக்கீல் சங்கத் தலைவரான பால் கனகாராஜோ கருணாநிதிக்கு பொக்கே கொடுத்து பல்லிளித்தபடி போஸ் கொடுத்தார். அப்படி என்றால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை கிளித்தெரிந்ததும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பை மீறி பணிக்குச் சென்ற திமுக வழக்கறிஞர்களை சங்கத்தை விட்டு நீக்குகிறோம் என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று உதார் விட்டதும், இப்போது வெறும் நாடகம் என்பது உண்மையாகியிருக்கிறது. திமுகவின் வேலைத் திட்டத்தின் கீழ் கொதித்தெழுந்த வழக்கறிஞர்களுள் ஊடுருவி சங்கத் தலைவர் பதவியை பயன்படுத்தி அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தவர்தான் இந்த பால் கனகாராஜ். இப்போது மேடையிலேயே தாக்க போலீசை அனுப்பியவருக்கு பூச்செண்டு கொடுத்தன் மூலம் அது அம்பலமாகியிருக்கிறது.

டாக்டர் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் யார்?

………………………………………………………………………

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களைப் போலீசை ஏவித் தாக்குதல் நடத்தியதோடு போலீசையும் பாதுகாத்தார் கருணாநிதி. இப்போது வழ்க்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது என்று கருப்புக் கொடி காட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களை தன் கட்சிக் குண்டர்களை விட்டுத் தாக்கியதோடு. அவர்களை தலித் விரோதிகளாகவும், அம்பேதகருக்கு எதிரிகளாகவும் சித்தரித்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞர்கள் அம்பேத்கர் சிலை திறந்ததையோ அந்த விழாவையோ தடுக்க வில்லை. வழக்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிம்னற வழகாத்திற்குள் வரக்கூடாது என்பதுதான் அவர்கள் வைத்த கோரிக்கை. விழா நடந்தது, அம்பேதகர் சிலை திறக்கப்பட்டது, நீதிபதிகளும் பேசினார்கள். யாருக்கும் எந்த எதிர்ப்பும் காட்டப்படவில்லை.

கருணாநிதி பேசத் துவங்கியதும் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடியைத் தூக்கி கோஷமிட்டனர். என்பதோடு சென்னை உயர்நீதிம்னறத்திலிருந்து பதவி உயர்வுபெற்றுச் செல்லும் நீதிபதிகள் நன்றிக்கடனுக்காவே இந்த விழாவை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கோகலே என்ற உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று பதவி உயர்வு பெற்று உச்ச நீதிம்னறம் சென்றார். அப்படிச் செல்லும் போது, வழக்கறிஞர்களிடம் போராடாதீர்கள். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

இவர் எப்படி போராடும் சக்திகளுக்கு நீதி வழங்குவார் என்பதை நினைத்துப் பாருங்கள். சரி கருணாநிதியின் அம்பேதகர் மீதான திடீர் பாசத்தையும் தலித்துக்கள் மீதான பாசத்தையும் நாம் அவசியம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். பண்ணைகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் இவர்கள் அரசியலில் அறிமுகமானார்கள். இந்த நாற்பது ஆண்டுகளில் பண்ணைகளாகவும், மன்னர்களாகவும், குறு நில மன்னர்களாகவும், இவர்களே மாறிப் போனார்கள், உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் தொடர்பாக பிரச்சனை எழுந்த போது கடைசி வரை அதில் மௌனம் காத்தார். கடைசியில் தீண்டாமைச் சுவரில் ஒரு செங்கல் அளவுக்கு பெயர்த்து ஒற்றையடிப் பாதை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது திமுக அரசு, தமிழகமெங்கிலும் கோவில் நுழைவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் தெரியும் கருணாநிதியின் தாழ்த்தப்பட்டோர் மீதான பாசம்.

திண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகமெங்கிலும் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்த போது பதறிப் போய் அய்யய்யோ அது வேண்டாம் என்று பதறித் துடித்தவர்தான் இந்தக் கருணாநிதி. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எது எதெல்லாம் பெரும்பான்மை சாதியோ அந்தச் சாதிகளையே பிரதிநிதித்துவம் செய்யும் கருணாநியின் ஆட்சியில்தான் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய 19 விவசாயக் கூலிகள் அடித்துக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள். அன்றைக்கும் காவல்துறை கருணாநிதியின் கையில்தான் இருந்தது.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றொரு சட்டம் கொண்டு வரப்படும், அர்ச்சகர் பயிற்ச்சிப்பள்ளிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அர்ச்சகர் பள்ளியில் படித்த பல நூறு மாணவர்கள் கையில் சான்றிதழோடு தெருவில் நிற்கிறார்கள். அரசு நிர்வாகமே இந்து நிர்வாகமாக மாறி அவர்களை ஆலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறது. அத்தோடு அர்ச்சகர் பயிர்சிப்பள்ளிகளையே இழுத்து முடியது கருணாநிதி அரசு. உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கில் கூட மனு தர்மத்திற்கு எதிராகவோ, ஆகம விதிகளுக்கு எதிராகவோ தனது வாதத்தை வைக்க வில்லை இந்த பெரியாரின் தம்பியின் அரசு. இதுதான் கருணாநிதியின் அம்பேதகர் பாசம். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்திரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும். ஆமாம் தோழர்களே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியவர்களும் அவர்கள்தான் சிதம்பரம் கோவிலில் தமிழ் உரிமைக்காக போராடி வென்றவர்களும் அவர்கள்தான்.

வழக்கறிஞர்களை தாக்கி விட்டு அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க கருணாநிதி அணிந்த முகமூடிதான் அம்பேதகர். கருணாநிதி இப்போது அணிந்துள்ள அம்பேதகர் முகமூடியைத்தான் சட்டக்கல்லூரி மோதல் சம்பவத்தின் போது நாம் பார்த்தோமே! அன்பார்ந்த நண்பர்களே!

………………………………………..

எல்லோரும் எல்லா காலத்திலும் மடையார்களாக இருக்க மாட்டார்கள். எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு தன்னை எல்லோரும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிற கருணாநிதி ஊடகங்க முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாயை அடைக்கிறார். ஈழப் போரின் போது, சேதுக்கால்வாய் திட்டத்தின்போது, முல்லைப் பெரியார் விவாகரத்தில், ஓகேனக்கலில் என கருணாநிதியின் உண்மை முகம் வெகு வேகமாக அம்பலப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு எந்த விதமான எதிர்ப்புகளும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கருணாநிதி ஊடகங்களை செய்தி வெளியில் வராமல் இருக்க ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறார்.

கருப்புக் கொடி விவாகரத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதியையும் மீறி உண்மை வெளிப்பட இப்போதோ கருங்காலிகள் என்றும், தலித், அம்பேதகர் விரோதிகள் என்றும் தோழர்களை முத்திரை குத்துகிறார். சுப்பிரமணியசுவாமி என்னும் மொசாட்டின் பார்ப்பன ஏஜெண்டுக்காக அடியாள் வேலை பார்த்த கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் காட்டிய கருப்புக் கொடி போராட்டம் நியாயமானது மட்டுமல்ல ஜனநாயக ரீதியிலானதுமாகும் கூட, அதை போலீசிடம் அனுமதி வாங்கி விட்டுச் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று சாதாரண ஒரு அரங்கக்கூட்டம் நடத்தக் கூட போலீஸ் அனுமதி என்னும் அளவுக்கு போலீஸ்சிடம் அதிகாரத்தை குவித்து வைத்துள்ள கருணாநிதி. இந்திராவுக்கு எதிராக மதுரையில் கருப்புக் கொடி காட்டிய போது எந்த போலீசில் அனுமதி வாங்கினார். ஆகவே தோழர்களின் எதிர்ப்பு நியாமானது.அதை நாம் ஆதரிக்க வேண்டும். தொடர்ந்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடும் தோழர்களை ஆதரிப்பதன் மூலம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பார்ப்பன அடிவருடிகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்து நிறுத்த வேண்டும்.

வெண்மணி - நன்றி இனியொரு

Thursday 18 March 2010

போராளிகளும் நாய்களும் - கருணாநிதியின் பச்சை வேட்டை

கருணாநிதி / மாறன் குடும்ப பத்திரிகையான தினகரன் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி இது-

ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை கண்டவுடன் வெட்டிக் கொல்ல வேண்டும் என கிராம மக்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள். காரணம் இரவில் அவர்கள் நடமாடும்போது குரைக்கிறதாம். மேற்கு வங்கத்தில் அதிரடிப்படை முகாம் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை ஒழிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள் இணைந்து Ôகிரீன் ஹன்ட்Õ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இரவில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டத்தின்போது, தெரு நாய்கள் குரைத்து அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதாம். அதனால் எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீ.வாதிகள். இதையடுத்துத்தான் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும் மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக கிராமம்தோறும் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன. நாய்கள் என்ன பாவம் செய்தன? அவற்றை ஏன் கொல்ல வேண்டும்? உங்கள் சண்டையில் நாய்களை ஏன் இழுக்கிறீர்கள்? தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள் என பீட்டா அமைப்பும் கெஞ்சிப் பார்த்துவிட்டது. ஆனாலும் மாவோ தீவிரவாதிகள் தங்கள் உத்தரவை வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள். கிராம மக்களுக்கு ஒரு பக்கம் தீவிரவாதிகளால் பிரச்னை. மறு பக்கம் அதிரடிப் படையினரின் விசாரணை தொல்லை. இவை போதாதென்று, நாய்கள் படுகொலை என்ற புதிய பிரச்னையும் சேர்ந்திருக்கிறது.

இந்த தினகரன் செய்தி சொல்ல வருவதென்ன?

ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க பிரதேசங்களில் பழங்குடி மக்களின் பூர்வீக வாழிடங்களை இந்திய அரசாங்கம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு விற்று விட்டமையை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது . பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இது எதுவுமே இந்த தினகரன் பத்திரிகைக்கு தெரியவில்லை. அங்குள்ள மக்களது உண்மை நிலையை அறிய தினகரன் இதுவரை ஏதாவது முயற்சியை மேற்கொண்டதா ?

தினந்தோறும் கொல்லப்படுகின்ற மக்கள் குறித்தோ ..இராணுவ படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்தோ...அழிக்கப்பட்ட கிராமங்கள் குறித்தோ.. தகவல்களை தேடியறிந்து தினகரன் செய்தி வெளியிட்டதா?

'ஜார்க்கண்ட், மேற்கு வங்க கிராமங்களில் கொத்துக் கொத்தாய் நாய்களின் சடலங்கள் இறைந்து கிடந்துள்ளன. கழுத்து வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் அவை இறந்து கிடந்தது விலங்கு ஆர்வலர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் சில கிராமங்களில் பல நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருந்தன. பிள்ளை போல் வளர்த்து வந்த நாய்கள் பரிதாபமாய் இறந்துபோன துக்கம் தாங்க முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கிராம மக்கள்' என்று எழுதும் தினகரன் அங்கு கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு துளியும் கவலைப்படவில்லை.

அடிக்கின்ற கொள்ளையை பங்கிட்டு கொள்ளவும், நித்தியானந்தா விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தவும், நடிகைகளை வைத்து போட்டி நடத்தவுமே இந்த கொள்ளைக்கார கருணாநிதி குடும்ப ஊடகங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து செய்தி வெளியிடுவது?

குறிப்பிடப்படுகின்ற பிரதேசங்களுக்கு சுயாதீனமாக செய்தியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்களது உண்மை நிலையை எடுத்துச்சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 'எந்தக் கிராமத்திலும் நாய்களே இருக்கக் கூடாது என முடிவு செய்து விட்டார்கள் தீவீரவாதிகள்' என்ற விடயம் மட்டும் தினகரனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

என்னே ஒரு பத்திரிகா தர்மம்.....என்னே ஒரு நடுநிலை...

வாழ்க ஊடகத்துறை!

சென்னையிலிருந்து இரா. வெங்கட் மணி

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

-- ஜீவேந்திரன்

Jeevendran

Saturday 13 March 2010

சந்தி சிரிக்கும் தமிழர் அரசியல் - தமிழ் ஈழம் 20/20

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இடம்பெற்று வருகின்ற கூத்துகள் மக்களிடையே ஆச்சரியத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் தேசியம் தமிழர் விடுதலை என்று வாய்கிழிய பேசியவர்கள் இன்று நாடாளுமன்ற பதவிகளுக்காக வெட்கம் மானம் இழந்து அடிதடியில் இறங்கியுள்ளனர்.

காலம் காலமாக இவ்வாறான பிழைப்புவாத அரசியலையே தமிழர்கள் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கேவலமான அரசியல் காரணமாகவே தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சிங்கள அரசியல்வாதிகள் தமிழரது சுயநல கேவலங்கெட்ட அரசியலை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தினார்கள். தமிழ் நண்டுகள் ஒரு போதும் இலக்கை அடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அது கடந்த காலம் போகட்டும் என்று ஒதுக்கி விட்டாலும் இப்போது என்ன நடக்கிறது?

பல்வேறு வழிகளிலும் பெரும் இழப்புகளை சந்தித்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் பெரு மூச்சு விட்டார்கள். இனியாவது தமது தலைவர்கள் ஒற்றுமையாக தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பாடுபடுவார்கள் என நம்பினார்கள்.

நந்தவனத்திலோர் ஆண்டியைப்போல விடுதலைப்பானையை முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் போட்டுடைத்த பின்னர் தமிழர்களுக்கு இருந்த ஒரு நம்பிக்கை வெளிச்சமாக தமிழ் கூட்டமைப்பே காணப்பட்டது. புலிகள் அரசியல் தெரியாதவர்கள் துப்பாக்கியை மட்டுமே நம்பியவர்கள், தமிழ் கூட்டமைப்பு அப்படியல்ல. அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் எனவே அரசியல் ரீதியாக விடுதலை வென்று எடுக்கப்படும் என பல ஆய்வாளர்கள் வழமை போல தமது பத்திகளை நிரப்பினார்கள். வழமை போல மக்களும் நம்பினார்கள்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் பொய்த்து போய்விட்டது.

முள்ளிவாய்க்காலில் அங்குசம் காணாமல் போய்விட்டதால் தமிழ் கூட்டமைப்பு யானை தறிகெட்டு ஓடத்தொடங்கி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி 8 அணிகளாக பிரிந்து IPL 20/20 போட்டியில் ஆடுவதைப்போல இப்போது தமிழ் கூட்டமைப்பு நான்கு துண்டுகளாக பிரிந்து தேர்தல் போட்டியில் ஆடுகிறது.

அணி 1. சம்பந்தர் மாவை சுரேஷ் ஆகியோரின் கூட்டமைப்பு.

அணி 2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தமிழ் காங்கிரஸ்

அணி3. சிவாஜிலிங்கம்,சிறீகாந்தா ஆகியோரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

அணி 4. மகிந்தவுடன் சேர்ந்து கொண்டுள்ள சிவநாதன் கிசோர் , கனகரத்தினம், தங்கேஸ்வரி ஆகியோரின் அணி

இப்போது அணிகளின் விவரங்களைப்பார்ப்போம்.

சிவநாதன் கிசோர் புலிகளின் தோல்வியுடன் மகிந்தவை போய்ப்பார்த்து சரணடைந்தார். ஆசையோடு மகிந்தவை கட்டித்தழுவி தனது பிழைப்பை உறுதிப்படுத்தினார்.

தமிழ் மக்களது வாக்குகளால் பதவியை பெற்று தமிழரை கொன்றவனின் கால்களை நக்கியதால் அவர் மைதானத்திற்கு வராமலேயே ஆட்டமிழந்தார். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தராமையால் கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றோரும் மகிந்தவிடம் சரணடைய நேர்ந்தது.

அடுத்தது புலம்பெயர்ந்த தமிழர்களால் வீணாக போனவர்தான் சிவாஜிலிங்கம். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் வழமைபோல வெளிநாடுகளில் வசதியாக வாழும் அரசியல் சனிகள் மன்னிக்கவும் ஞானிகள் கொதித்து எழுந்தார்கள். மகிந்தவும் சிங்களவன்தான் சரத்தும் சிங்களவன்தான். ஒருவன் கொல்லச்சொன்னவன், மற்றவன் கொன்றவன். எதற்காக அவர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்? ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எம்மிடம் ஒரு தமிழன் இல்லையா? என்று வீராவேசமாக கர்ஜித்தார்கள்.

இதைக்கேட்ட சிவாஜிலிங்கம் முந்திரிக்கொட்டை போல முன்வந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒதுக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்களால் அநியாயமாக ஆட்டமிழப்பு செய்யப்பட்டவர்தான் சிவாஜிலிங்கம். ஆனால் சோகம் என்னவென்றால் அப்படி உசுப்பேத்தியவர்கள் கூட தேர்தலின் போது அவரைக்கண்டு கொள்ளவில்லை.

தமிழ் கூட்டமைப்பில் சம்பந்தர் மாவை சுரேஷ் தரப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் தரப்பும் ஒரு அணி போல தோன்றினாலும் உள்ளே பிரச்சனைகள் ஆரம்பித்திருந்தன. இந்த நிலையில்தான் தமிழ் கூட்டமைப்பில் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. இதை காரணமாக கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகி தாம் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இப்போது முக்கியமான பலப்பரிட்சை இந்த இரு அணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது. தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு முழுவதிலும் அவர்களுக்கு செல்வாக்கு உண்டு. தமிழ் காங்கிரசிற்கு குடாநாட்டில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் ஞானிகளும் கூட்டமைப்புக்கு சார்பாகவும் தமிழ் காங்கிரசுக்கு ஆதரவாகவும் என பிரிந்து நிற்கிறார்கள்.

இங்கே ஒரு உண்மை வெளிப்படையானது. தமிழர்கள் பலமாக இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். தமிழர்கள் ஒரு அணியாக பலமாக இருந்தால் அது எப்போதுமே ஆளும் சிங்கள தரப்பிற்கு நெருக்கடியாகவே அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதிலும் நரி மூளை படைத்த மகிந்த பிரித்தாளும் தந்திரத்தில் தேர்ந்தவர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை பிளந்தவர். ஒற்றுமைக்கும் கட்டுக்கோப்புக்கும் பெயர்போன ஜேவிபி கட்சியை உடைத்தவர், முஸ்லிம் காங்கிரசை சிதைத்தவர்.

எனவே தமிழர்கள் ஒரு அணியாக பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர விடுவாரா என்ன. எனவேதான் அவர் பிள்ளையான் முதல் சுயேட்சைகள் வரை களத்தில் இறக்கியிருக்கிறார். இப்படியான ஒரு நேரத்தில்தான் கூட்டமைப்பும் காங்கிரசும் பலிக்கடாவாக தாமே போய் மகிந்தவிடம் கழுத்தை நீட்டியிருக்கிறார்கள்.

சரியோ பிழையோ விடுதலைப்புலிகள் தமிழரது தலைமைத்துவமாக கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை எதோ ஒரு நம்பிக்கையில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.இப்போது தமிழர்களுக்கென ஒரு உறுதியான தலைமைத்துவம் இல்லாமல் போயுள்ளமை வெளிப்படையானது. இது தமிழருக்கு மிகவும் ஆபத்தான சூழலாகும்.

இப்படியான ஒரு தருணத்தில் பிரிந்து மோதிக்கொள்ளும் தமிழ் கூட்டமைப்பும் தமிழ் காங்கிரசும் தாமே தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் என்கிறார்கள்.தமிழ் காங்கிரசானது சம்பந்தர் தரப்பினர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது.

'சம்பந்தர், மாவை, சுரேஷ் தரப்பு இந்தியாவின் தாளத்திற்கு ஆடுகின்றனர். அடிக்கடி இந்தியாவிற்கு சென்று ஆலோசனை பெறுகின்றனர். இந்தியாவே அவர்களை இயக்குகிறது' என்பது ஒரு குற்றச்சாட்டு . இதே குற்றச்சாட்டையே சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் தமது ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

'தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது.சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது' என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு தமிழ் கூட்டமைப்பு,

'தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்தன' என பதில் சொல்கிறது.

அடுத்ததாக தமிழ் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு

'2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைபபின் மூத்த தலைமைகளினால் இரகசியமான முறையில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்தாமல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள வரைபில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கபட்டு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. அந்த தீர்வுத்திட்ட வரைபானது தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சுட்டிகாட்டியிருந்தனர்'

'அத்துடன் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், அதன் தனித்துவமான இறைமை ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினர். மேற்படி உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூட்டமைப்பின் மூத்த தலைமைகள் எதேச்சாதிகாரமாக மறுத்தனர். தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை என்ற அடிப்படைகளில் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதனை பிராந்திய சக்திகள் ஒருபோதும் விரும்பாது ஏற்றுக் கொள்ளாது என்றும் அந்த சக்திகளின் விருப்பப்படியே தாம் செயற்பட வேண்டும் என்றும் அடித்துக் கூறிவிட்டனர்.தந்தை செல்வா தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒருபோது உதவாது என்று 35 வருடங்களுக்கு முன்னர் கைவிட்ட வழிமுறைகளை மீண்டும் கையாள கூட்டமைப்பின் தலைமை முயல்கின்றது' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பானது,

'எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம்'

'இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். ஆனால் இன்று ''மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம்'' என்று கூறுகிறார். ஓர் வரைபு உருவாக்கப்பட்டால்தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத்தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது.

கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா?தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை' என்கிறது.

தமிழ் காங்கிரசின் அடுத்த குற்றச்சாட்டு

'விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. இது விடுதலைப்புலிகளின் சார்பு அணியினரை அகற்றும் மறைமுகமான நடவடிக்கை' என்பதாகும்.

இதற்கு பதிலளிக்கும் தமிழ் கூட்டமைப்பு

'பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். மே 2009 ற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் விடுப்பு எடுத்தால் பதவி பறி போகும் என்ற நிலையில் பதவிகளை காப்பாற்ற வேண்டும் என பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்தீர்கள். ஆனால் நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?' என்று கேள்வி எழுப்புகிறது.

இதே வேளை தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாதுரை விநாயகமூர்த்தி கூறும்போது, 'செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி கூட்டமைப்பைப் சிதைப்பது உகந்தது அல்ல. அவ்வாறாயின் இவர்களுடைய தமிழீழம், தேசியம் என்பது அவர்களுக்கு ஆசனம் வழங்குவதிலா தங்கியுள்ளது?

இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தால் இவர்களும் கூட்டமைப்பின் கொள்கைக்காக தம்மை அர்ப்பணித்திருப்பார்களே! அவ்வாறாயின் இவர்களின் கொள்கை என்ன இரண்டு ஆசனங்களிலா தங்கியுள்ளது. கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து, வரலாற்றுத் தவறு இழைக்கத் தாம் விரும்பவில்லை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கேட்ட எல்லா விடயங்களையும் வழங்குவதற்குத் தமிழ்க் கூட்டமைப்புத் தயாராக இருக்கும்போது அதிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்தும் காரணம் ஏதும் அகப்படவில்லை எனவே வெளியேறும் முடிவை ஏற்றுக்கொள்ளவேயில்லை' என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள்... ..பதில்கள்... ..எதிர் குற்றச்சாட்டுகள்... ..அவதூறுகள்.. ..என IPL 20/20 போட்டிகளை போல தமிழ் ஈழ போட்டிகள் மிக விறு விறுப்பாக இடம்பெற்று வருகிறது.

இந்த சுற்றுப்போட்டியை மகிந்த டக்லஸ் கருணா பிள்ளையான் சித்தார்த்தன் குழுவினர் மிகவும் அனுபவித்து உற்சாகமூட்டி பார்த்து வருகிறார்கள். ஒரு வகையில் இந்த போட்டியை அவர்களே ஏற்பாடு செய்திருப்பதால் போட்டியின் இலாபங்களை அவர்களே அனுபவிக்க போகிறார்கள்.

ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இராணுவ காவலில் உள்ளமை பற்றியோ .. 20 000 இற்கும் அதிகமான இளையவர்கள் புலிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியோ.......நாளாந்தம் சிறுக சிறுக சத்தமின்றி கொன்று புதைக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ...இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

மீள குடியேற சென்ற மக்களுக்கு எவ்வித வாழ்வாதாரங்களும் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, தொழில் தொடங்க எந்த உதவியும் இல்லை. இவை குறித்து எமது தமிழர்களின் பிரதிநிதிகளாக கூறிக்கொள்கின்ற இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்களுக்கு எப்படியாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் போதும்.

இவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதனூடாக தமிழ் மக்களது எல்லா பிரச்சனைகளும் தீரப்போகிறது.

தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது...

உரிமையா? வெங்காயம்....

விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க.....

வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜீவேந்திரன்

Jeevendran

இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.