Friday 9 January 2015

ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ச


தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து மகிந்த ராஜபக்ச எனும் சர்வாதிகாரியை வீழ்த்தி இருக்கிறார்கள், இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தேர்தல் மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ஷவே அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த பகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவை விட மகிந்த பெற்ற மேலதிக வாக்குகளை பாருங்கள்-

களுத்துறையில் 46,486, காலியில் 83,132, மாத்தறையில் 85,388, அனுராதபுரத்தில் 42,754, கேகாலையில் 25,597, இரத்தினபுரியில் 86,539, ஹம்பாந்தோட்டையில் 1,04,587, மொனராகலையில் 67,469, குருணாகலையில் 80,266, மாத்தளையில் 12,952. மேற்குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்களில் மைத்திரியை விட மகிந்த 6,35,170 வாக்குகள் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மைத்திரிபாலாவுக்கு வாக்களித்த சிங்கள பிரதேசங்கள் என்று பார்த்தால் பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா என்பன மட்டுமே இருக்கின்றன. இதில் பொலநறுவை மைத்திரிபாலவின் சொந்த மாவட்டம். அங்கு அவருக்கு 42,334 மேலதிக வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களும் செறிவாக வாழும் மகாநுவரவில் 88,409 மேலதிக வாக்குகளும், கம்பஹாவில் வெறுமனே 4 660 வாக்குகளும் என மொத்தமாக 1,35,403 வாக்குகளே மேலதிகமாக கிடைத்திருக்கின்றன.

இவை தவிர்த்து கொழும்பு என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. தமிழ் முஸ்லிம் மக்கள் மிக செறிவாக வாழும் தேர்தல் மாவட்டம். இங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி மைத்திரிபால 1,62,459 வாக்குகள் மேலதிகமாக பெற்றிருக்கிறார். கொழும்பையும் தனி சிங்கள மக்களின் பிரதேசமாக கொண்டு பொலநறுவை, மகாநுவர(கண்டி), கம்பஹா மாவட்டங்களுடன் சேர்த்தாலும் கூட மொத்தமாக மைத்திரிபாலவிற்கு சிங்கள மக்களால் கிடைத்த மேலதிக வாக்குகள் 2,97,862 மட்டுமே.

ஆனால் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களான யாழ்ப்பாணத்தில் 1,79,120, மட்டக்களப்பில் 1,67,791, வன்னியில் 1,07,040, நுவரெலியாவில் 1,27,266, திகாமடுல்லவில் (அம்பாறை) 1,12,333, திருகோணமலையில் 88,227 வாக்குகள் என மகிந்தவை விட மைத்திரிபால சிறிசேனவுக்கு மொத்தமாக 7,81,777 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

கொழும்பை தவிர்த்துவிட்டு பார்த்தால்-

சிங்கள பிரதேசங்கள் மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.

சிங்கள பிரதேசங்கள் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.

அதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர்.

இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து மகிந்த எனும் இனவாத சர்வாதிகாரியை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குப்பலமானது முன்னெப்போதும் இல்லாத அளவில் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப்போகிறது என்பதை தெளிவாக காண முடிகிறது.

இதேவேளை சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இப்படி மகிந்த தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கவேண்டியவர். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2005 நவம்பர் 17 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தமை மாபெரும் அழிவு சரித்திரத்தை உருவாக்கியது. வட மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்காத நிலையில் வெறும் 1,90,000 மேலதிக வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ரணில் விக்கிரமசிங்க எதிர்பாராத தோல்வியை தழுவினார்.

நல்லவேளையாக இம்முறை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்காது தமது வாக்குகளின் மூலம் மகிந்த ராஜபக்சவிற்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள். நவீன துட்டுகெமுனு அரசனாக தன்னை நிலை நிறுத்தி, தமிழர்களுக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்ற அரசனாக மகாவம்சத்தில் இடம்பெற துடித்த இனவாதிக்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள். வெல்ல முடியாத போர் என்று சர்வதேசத்தாலும் வர்ணிக்கப்பட்ட போரை வென்று காட்டிய மாவீரனாக, சாகும் வரை ஜனாதிபதியாக அதிகாரத்துடன் வாழ ஆசைப்பட்ட மகிந்தவின் பேராசைக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சாவு மணியடித்திருக்கிரார்கள்.

அசைக்க முடியாத மகிந்தவுக்கு சரியான போட்டியாளரை மகிந்தவின் மடியிலிருந்தே பிரித்தெடுத்து சாணக்கியமாக சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சாதித்த சந்திரிகா குமாரதுங்கவும் இங்கு குறிப்பிடப்படவேண்டியவர்.

இலங்கை ஜனாதிபதியாக ஒருவர் இரு தடவைகளே பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை மீறி, அரசியலமைப்பை மாற்றி, நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி மூன்றாவது முறையாகவும் அதிகாரத்தை சுகிக்க பேராசைப்பட்ட மகிந்த தனது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும்போதே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. செல்வாக்கு முற்றாக சரியும் முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வென்றுவிட வேண்டும் என்ற அல்லக்கைகளின் ஆலோசனையை கேட்டு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தேர்தலை மகிந்த சந்தித்தார். மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவை அதிகாரத்திலிருந்து அசைக்கமுடியாது என்று சாத்திரம் கூறியிருந்தார். திருப்பதிக்கு சென்று மகிந்த ஆசியும் வாங்கி இருந்தார். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் மகிந்தவின் ஆட்டத்தை முடித்துவைத்துவிட்டனர்.

குற்றவாளி மகிந்தவை வீழ்த்துவது என்ற நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் தமிழர்களுக்கான சம உரிமை என்ற நோக்கம் நிறைவேறும் காலம் அருகில் இருப்பதாக தெரியவில்லை.

என். ஜீவேந்திரன்.

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.