Friday 11 June 2010

இந்தியாவின் போலி ஜனநாயகம்

இந்தியாவின் போலி ஜனநாயகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது போபால் வழக்கின் தீர்ப்பு. இரு நாட்களில் மட்டும் 20 000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு, ஆயிரமாயிரம் மக்கள் சித்தரவதைக்கு உட்பட்டு மெது மெதுவாக செத்துக்கொண்டிருக்கும் ஒரு படு பாதக செயலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை பார்க்கையில் அதிச்சியடையாதோர் இருக்க முடியாது.

அதுவும் 1984 ஆம் ஆண்டு நடந்த கொடூரத்திற்கு வேண்டுமென்றே 26 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு இந்திய நீதி(?) வழங்கப்பட்டிருக்கிறது.

இது ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் காறி உமிழப்பட்ட ஒரு தீர்ப்பு மட்டுமல்ல, இதற்கு காரணமாக தாங்கள் நம்புகின்ற தமது சொந்த அரசியல் தலைவர்களே இருக்கிறார்கள் என்ற மிக மிக வெட்கக்கேடான விடயத்தை வெளிப்படுத்துவதும் ஆகும்.

பச்சை வேட்டை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தனது சொந்த மக்களையே வேட்டையாடுகின்ற இந்திய ஆட்சியாளர்கள், 26 வருடங்களுக்கு முன்பு போபாலில் தனது சொந்த மக்களான 20 000 பேரின் உயிரை குடித்த அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைவர் மற்றும் அதிகாரிகளையும் பாதுகாத்திருக்கின்றனர் . அதனூடாக அவர்கள் தம்மையும் பாதுகாத்துக்கொண்டனர். காரணம் இந்த கொடுமைக்கு அமெரிக்க நிறுவனம் மட்டுமல்லாது இந்திய ஆட்சியாளர்களும் மிக முக்கிய காரணமாகும்.

அத்தோடு இந்த துயரத்திற்கு அமெரிக்க நிறுவனத்தை விட இப்போது ஆட்சியில் உள்ள அதே காங்கிரஸ் கட்சிதான் அப்போதும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தையும் காந்தியத்தையும் வரித்துக்கொண்டதாக இன்றும்கூட மக்களை ஏமாற்றி வருகின்ற காங்கிரசின் பணநாயகத்திற்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

விபத்து நடந்த ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்த குற்றத்திற்கு உடந்தையாக அவரும் அவரது சகாக்களும் இருந்தமை தெளிவான ஒன்றாக உள்ளது. பாரிய அளவில் லஞ்சப்பணம் கைமாறப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான டேவிட் அன்டசன், ராஜீவ் காந்தியால் பாதுகாக்கப்பட்டமையும், வழக்கில் தலையீடு செய்தமையும் இன்று சம்பந்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

01. இவ்வாறான அதி அபாயகரமான தொழிற்சாலை மக்கள் குடியிருப்புகளிருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதி கவனத்தில் கொள்ளப்படவில்லை.

02. விபத்துகளுக்கான சாத்தியம் தொடர்பில் முறையாக கண்காணிக்கப்படவில்லை.

03. விபத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், விபத்து நடந்தால் செய்யப்படவேண்டியவை குறித்து உரிய நடவடிக்கைகள் இருக்கவில்லை.

04.விபத்து நடந்தவுடன் நிறுவனத்திற்கு பொறுப்பான அமெரிக்கரான டேவிட் அன்டசன் பிணையில் வெளிவர வரக்கூடியவாறு, அதுவும் ஒரு ஒரு சம்மன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

05. டேவிட் அன்டசன் ராஜீவ் காந்தியின் உத்தரவுடன் போபாலில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

07. இவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக டேவிட் அன்டசன் இருந்த போதும் இதுவரை அவரை நாடுகடத்தும் படி இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவை நிர்ப்பந்திக்கவில்லை (அப்படி செல்லும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் டேவிட் அண்டசனின் உல்லாச விடுதியில் அவருடன் மது அருந்தி உல்லாசமாக இருந்தமை ஊடகங்களால் பிரித்தானிய ஊடகத்தால் வெளிப்படுத்தப்பட்டது)

08. யூனியன் கார்பைட் (அமெரிக்கா 50.9% / இந்தியா 49.1%) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்பாரில் என்ற பூச்சி மருந்தை மிக செலவு குறைந்த ஆனால் அபாயகரமான மீதைல் ஐசோசயனேட் என்ற நச்சுப்பொருளைப் பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

09. வெடி பொருட்கள், நச்சுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை கையாள்வது, கட்டுப்படுத்துவது தொடர்பில் உள்ள இருபதுக்கும் மேலான சட்டங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

10. தொழிற்சாலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு முறையான கல்வி, நடைமுறைப்பயிற்சி, ஆபத்து குறித்த விளக்கம், விபத்து தவிர்ப்பு போன்றன குறித்து உரிய முறையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

11. விபத்தின் பிறகு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த வழக்கு பிரிவு ராஜீவ் காந்தியின் அழுத்தத்தால் மத்திய அதிகாரிகளின் வேண்டுதலுடன் மனிதர்களை படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 304 இலிருந்து சாதாரண சாலை விபத்து போன்றவைகளுக்கு பயன்படுத்தும் 304 ஏ சரத்துக்கு மாற்றப்பட்டது.

12. வழக்கு வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்திக்கு பிறகும் முதலாளிகளையும் பெரும் தனவந்தர்களையும் பாதுகாக்கும் கவசமாக இயங்கி வருகின்ற காங்கிரஸ் கட்சி இந்த வழக்கு தொடர்பிலும் அவ்வாறே செயற்பட்டது / செயற்பட்டு வருகிறது.

பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு போபால் விஷவாயு வழக்கில் தலையிட்டு ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என சிபிஐக்கு உத்தரவிட்டது. போபால் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பு மன்மோகன் சிங்கை சந்தித்த போது யூனியன் கார்பைட் பற்றி என்னுடன் பேச வேண்டாம் என்று அவர்களை வெளியேற்றியதை தெஹல்கா அம்பலப்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியும் மன்மோகன் சிங்கும் இந்த வழக்கை மீளப்பெறுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அது இடதுசாரிகளின் எதிர்ப்பினால் சிக்கலான நிலையில் தண்டனையை மிக குறைந்ததாக மாற்றியமைத்துள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசு 1984-ல் யூனியன் கார்பைட் நிறுவனத்திடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டிருந்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் சற்றும் குறைந்த கட்சியாக இல்லாமல் பாரதிய ஜனதா கட்சியின் காலப்பகுதியில் 1999-ல் 450 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக ஏற்றுக்கொண்டது.

போபால் கொடூரத்தால் சொல்ல முடியாத இழப்பு எற்பட்டுள்ள போதும் யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கியுள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எவரெடி மின்கலங்களை தயாரிக்கின்ற இந்த நிறுவனம் ராஜ மரியாதைகளுடன் அரசியல் செல்வாக்குடன் இயங்கி வருகிறது. மேலும், இந்த டௌ கெமிக்கல்ஸ்காகத்தான் சிபிஎம் அரசு நந்திகிராமில் மக்களை கொன்றொழித்தனர்.

இத்தனை கொடுமைகளுக்கும் இடையே விபத்து இடம்பெற்ற பிரதேசம் இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. அங்கிருக்கும் நச்சுப்போருட்கள் தினந்தோறும் மண்ணோடு கலந்து வருகிறது. நீர் மாசுபட்டு வருகிறது. இதனை சுத்தம் செய்வதற்கு கூட டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் இன்று வரை மறுத்து வருகிறது. இவாறான ஒரு கேவலமான நிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் சூழல் பாதுகாப்பாளர்கள். டௌ கெமிக்கல்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமது சொந்த மக்களை இந்திய ஆட்சியாளர்கள் விற்று விட்டனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஏற்கனவே ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் தொடர்ந்து நரவேட்டை நடத்தி வருகிறது.

ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தமது சொந்த வாழிடங்கள் பறிபோவதை எதிர்க்கும் மக்களை பச்சை வேட்டை எனும் பெயரில் வேட்டையாடி வருகிறது. இதுவரை இற்கும் மேட்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மக்கள் அழிவை நியாயப்படுத்தி வருகின்ற இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “வேதாந்தா” நிறுவனத்தில் சட்ட ஆலோசகர் என்பதும், அந்நிறுவனத்தில் மறைமுகமாக பணி புரிபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இடது சாரி அமைப்புகள் இவ்வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றில் மென் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் 1996-ல் படுகொலை குற்றமாக கருதவேண்டிய [culpable homicide ] குற்றத்தை கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் [death by negligence ]என மாற்றி ஆணையிட்டதே உச்சநீதிமன்றம்தான். எனவே பணத்தால் கட்டுப்படுத்தப்படுகின்ற இந்திய நீதிமன்றில் இதற்கு நீதி கிடைப்பது சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை.

இந்திய ஜனநாயகம் பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது. இது ஏழைகளுக்கான ஜனநாயகம் அல்ல. இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக, சட்ட, நீதி, நிர்வாக சார்ந்த நிறுவங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கானது, இந்த இந்திய ஜனநாயகம் என்பது ஒரு போலி ஜனநாயகம் என்பது மீண்டும் ஒருமுறை இந்திய மக்களின் முகத்தில் காறி உமிழ்ந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday 10 June 2010

பரதேசி ஞாநியும் பன்னாடை விமர்சனமும்

போர் குற்றம் புரிந்தமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்சே அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் தான் குற்றவாளியாகும் சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காக பல கண் துடைப்பு நாடகங்களை நடத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை இலங்கையில் நடத்துவது. இதன் மூலம் இலங்கையை அமைதியான, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நாடாகவும், படுகொலைகளே நடக்காத சுத்தமான பூமியாக தி‌ரித்து‌க் காட்டவும் அது முயன்றது. இதன் காரணமாகவே தமிழ் திரையுலகமும், தமிழ் அமைப்புகளும், வைகோ, சீமான், நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களும் இலங்கையில் திரைப்பட விழாவை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தங்களது போராட்டங்களின் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்தனர். திரைப்பட விழா பெருத்த தோல்வியில் முடிந்தது.

இது தமிழகத்திலுள்ள சில அறிவு‌‌ஜீவிகளுக்கு மாறாத அ‌‌ஜீரணத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சகர் ஞாநி வார இதழ் ஒன்றில் திரைத்துறையின‌ரின் புறக்கணிப்பை கண்டித்து எழுதியிருக்கிறார். போர் மனிதர்களை பி‌ரிக்குமாம், கலைதான் ஒன்றிணைக்குமாம். தமிழ் திரைத்துறையினர் இலங்கை போய் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டுமாம். ஆனால் அப்படி செய்யாமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார்களாம்.

மனசாட்சியை முன்னிறுத்தி இதேபோல் காருண்யத்தின் மடையை ஞாநி அந்த கட்டுரையில் எக்கச்சக்கமாக திறந்திருக்கிறார். அவை பற்றி மேலும் குறிப்பிடுவதற்குமுன் ஞாநியின் விமர்சன முறை பற்றியும் ஈழப் பிரச்சனையில் அவரது மனநிலை எத்தகையது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

ILE இசை விமர்சகர்கள், சினிமா விமர்சகர்கள், அரசியல் விமர்கர்கள் என்று தனித்தனியே இருக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த துறையில் வல்லுனர்களாக இருப்பார்கள். ஆனால் ஞாநி ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் விமர்சிப்பவர். இதன் காரணமாக அவரது விமர்சனத்தில் தனி மனித விருப்பு வெறுப்பு எப்போதும் துலக்கமாகவே வெளிப்படும். ஈழப் பிரச்சனையே அதற்கு ச‌ரியான உதாரணம்.

இதே வார இதழில் சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி வி‌ரிவாக எழுதியிருந்தார். கட்டுரை அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

சென்னை குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பேசும் போது எதற்கு தேவையில்லாமல் ஈழம் குறித்துப் பேசுகிறவர்களை இழுக்க வேண்டும்? உள்ளூர் பிரச்சனைகளை முடித்தப் பிறகுதான் வெளியூர் பிரச்சனை பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூற விரும்புகிறாரா? அப்படியானால் இங்குள்ள குடிநீர் பிரச்சனையை முன்னிறுத்தி குஜராத் படுகொலைகள் பற்றி பேசுகிறவர்களை மடக்க முடியும். கொசுப் பிரச்சனையை முன்னிறுத்தி காசா பிரச்சனை பற்றி பேசுகிற வாய்களை அடைக்க முடியும். ஏன் ஞாநி கூட உள்ளூர் பிரச்சனைகள் எத்தனையோ முடிக்கப்படாமல் இருக்கும் போது வெளிநாட்டு பிரச்சனைக்கு கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஆக, அவரது நோக்கம் உள்ளூரா வெளியூரா என்பதல்ல. ஈழம் ஞாநிக்கு அலர்‌ஜி. அது குறித்துப் பேசுகிறவர்களை எப்படியேனும் மட்டம்தட்ட வேண்டும். மேலே சொன்ன கட்டுரையில் வெளிப்பட்டது இந்த மனநிலைதான்.

ஈழம் குறித்து பேசுகிறவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்பதான தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி, அவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்க வேண்டும் என்பதே ஞாநியின் நோக்கம். காரணம் ஈழப் பிரச்சனையில் அவர் தமிழர்கள் சார்பாக நிற்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஈழப் போராளிகளை முன்னிறுத்தி ராஜபக்சேயின் படுகொலைகளை மறைக்கும் ஒரு படுதாவாகவே அவரது பேச்சும் எழுத்தும் இன்று வரை இருந்து வந்திருக்கிறது. இதற்காக அவர் தனது உய‌ரிய கொள்கைகள் எனக் கருதுகிறவற்றையே காலில் போட்டு மிதிக்கவும் தயங்கியதில்லை.

உதாரணமாக, சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பாராட்டி எழுதிய ஞாநி, அரசியல் கருத்து வேற்றுமை உள்ள இருவர் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், பரஸ்பரம் நலம் விசா‌ரிப்பதும் ஆரோக்கியமான செயல் என்று கூறி, அப்படியில்லாத திராவிட கட்சி தலைவர்களை குட்டவும் செய்தார்.

அதே ஞாநி, ஜெகத் கஸ்பர் பாதி‌ரியாரும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒரே மேடையில் தோன்றிய போது தனது கட்டுரையில் இப்படி எழுதினார். ‘ஜெகத் கஸ்பர் புலி ஆதரவாளர். காங்கிரஸ்காரரான கார்த்தி சிதம்பரம் எப்படி அவருடன் ஒரே மேடையில் இருக்கலாம்? அப்படியானால் கார்த்தி சிதம்பரம் ஜெகத் கஸ்ப‌ரின் புலி ஆதரவு கொள்கையை ஆத‌ரிக்கிறாரா?’

சோனியாவும், அத்வானியும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு கொள்கை காங்கிரஸுக்கு உடன்பாடானதா என்று கேள்வி எழுப்பாமல், அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசா‌ரித்ததை கொண்டாடிய ஞாநி, ஜெகத் கஸ்பர் விஷயத்தில் மட்டும் நீ யார் பக்கம் என்று வம்படியாக கேள்வி கேட்பது ஏன்?

ஏனென்றால் ஈழமும் ஈழப் போராளிகளும் ஞாநியால் சகித்துக் கொள்ள முடியாதவை. எத்தனை முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம், நலம் விசா‌ரிக்கலாம். ஆனால் ஈழத்தை ஆத‌ரிப்பவன் என்றால் மட்டும் அவனுடன் யாரும் பேசக்கூடாது, பழகக் கூடாது, ஒரே மேடையில் தோன்றக் கூடாது. இதற்கு பெயர்தான் நவீன தீண்டாமை.

மேலே உள்ள ஞாநியின் இரு கருத்துகளுமே ஈழம் எத்தனை தூரம் அவருக்கு அலர்‌ஜி என்பதை உணர்த்திவிடுகின்றன. இதன் எதிரொலிதான் திரைப்பட விழாவை புறக்கணித்த திரையுலகினரை மனசாட்சியில்லாதவர்கள் என்று ஞாநி சாடியிருப்பதும்.

மனித மனங்களை பி‌ரிப்பது அரசியல், ஒன்றிணைப்பது கலை என்று தனது கட்டுரையில் உருகியிருக்கிறார் ஞாநி. இதில் வேடிக்கை என்னவென்றால் ஞாநி வக்காலத்து வாங்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி கலையையே பி‌ரித்து ஒரு அசிங்கத்தை பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி என்று பெயர் இருந்தாலும் இந்தி திரைப்படங்களுக்கு மட்டும்தான் அவர்கள் விருது வழங்குவார்கள். இந்தியாவில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டி, கன்னடம், வங்கம் என பிற மொழிகளை அவர்கள் கணக்கிலேயே எடுப்பதில்லை. இந்தியா என்றால் அவர்களுக்கு இந்தி மட்டும்தான்.

இந்திய மொழிகளையே மதிக்கவும், இணைக்கவும் தெ‌ரியாத ஒரு திமிர் பிடித்த அகாதமியின் முதுகில் ஏறி சிங்களவனையும், தமிழனையும் ஒன்றிணைக்க வேண்டுமாம். உளறலுக்கு ஒரு அளவில்லையா?

இறுதிகட்டப் போரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கு என்ன காரணம்? ராஜபக்சே அரசு மற்றும் புலிகளின் தவறான அரசியலே காரணம் என்று எழுதுகிறார் ஞாநி. புலிகளை முன்னிறுத்தி கொலைகாரன் ராஜபக்சேவை எப்படி காப்பாற்றுகிறார் பாருங்கள். திரைப்பட விழாவுக்கு செல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று இரண்டு பக்கம் கண்டிப்பவர், ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்தவனை ஒரே வ‌ரியில் தாண்டிச் செல்கிறார். இதுதான் அறிவு‌‌ஜீவி ஞாநியின் மனசாட்சி.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதும் நாம் கி‌ரிக்கெட் விளையாடினோம், இப்போது மட்டும் ஏன் இலங்கையை புறக்கணிக்க வேண்டும் என்று இன்னொரு வக்காலத்து. ஐயா, நாம் இப்போதும் இலங்கையுடன் கி‌ரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோது அமிதாப்பச்சன் பாகிஸ்தானில் டான்ஸ் ஆடினாரா என்பதுதான் எங்கள் கேள்வி? இல்லை, மும்பையில் கசாப் தாக்குதல் நடத்திய ஓராண்டு நிறைவு விழாவை பாகிஸ்தானில் விருது விழா நடத்தி கொண்டாடுவார்களா? அதில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று எந்த விமர்சகனாவது எழுதுவானா?

எத்தனை பெ‌ரிய யுத்தம் நடந்தாலும் கலைஞர்களு‌ம், விளையாட்டு வீரர்களும் கலாச்சார ப‌‌ரிவர்த்தனை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று எழுதுகிறார் ஞாநி. நிறவெறி காரணமாக பதக்கத்தை ஆற்றில் எறிந்த முகமது அலியும், அதே நிறவெறி காரணமாக விளையாட்டுத் துறையிலிருந்தே விலக்கி வைக்கப்பட்ட தென் ஆப்பி‌ரிக்காவும் இந்த அறிவு‌‌ஜீவியின் நினைவுகளிலிருந்து மறந்து போனது துரதிர்ஷ்டம்.

சிங்களவனுக்கும், தமிழனுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று மாய்ந்து போய் எழுதுகிறார் ஞாநி. இந்த நல்லுறவு கோஷம் ஒரு கொலைகாரனையும், பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்த ஒரு படுபாதக நிகழ்வையும் சாமர்த்தியமாக மறைக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

போலீஸ்காரர் ஒருவனிடம் நீ பணத்தை திருடினாயா என்று கேட்பதற்கும் திருடிய பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வியில் அவன் திருடன் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரண்டாவது கேள்வியில் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பணத்தை எங்கு வைத்திருக்கிறாய் என்று கேட்பதன் மூலம் குற்றம் சாற்றப்பட்டவன் நான் திருடனில்லை என்று மறுப்பதற்கான சாத்தியத்தை போலீஸ்காரர் நிராக‌ரித்துவிடுகிறார்.

ஞாநி போன்றவர்களின் சிங்கள, தமிழர் நல்லுறவு கோஷமும் இத்தகையதே. நல்லுறவைப் பற்றி கூக்குரல் இடுவதன் மூலம் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கெதிரான நீதி எங்கே என்று கேட்கும் குரல்களை தாண்டிச் செல்லப் பார்க்கிறார்கள். கொலைகளைப் பற்றியும், கொலைகாரனைப் பற்றியும் பேச முன்வராதவர்கள் கலை பற்றியும், நல்லுறவு பற்றியும் பேச தகுதியில்லாதவர்கள்.

ஞாநி தனது கட்டுரையில் ஈழத் தமிழர்கள் நல்ல திரைப்படங்களை உருவாக்கவில்லை, அதேநேரம் சிங்களவர்கள் உலகத்தரமான படங்களை இயக்கியிருக்கிறார்கள், கண் தானம் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள் என்று எழுதுகிறார். சமீபத்தில் இலங்கை சென்று வந்த விமர்சகர் அ.மார்க்ஸ் இதே வார இதழில் எழுதியிருந்த கட்டுரையில், சோழர்களால் இடிக்கப்பட்ட புத்தவிகாரை பார்க்க முடியவில்லை என்று அங்கலாய்த்திருந்தார்.

பிள்ளைக்கறி சாப்பிடுகிற ஒரு கொலைகாரனைப் பற்றி பேசும் போது, இல்லையில்லை அவன் நன்றாகப் பாடக் கூடியவன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அதையேதான் இந்த அறிவு‌‌ஜீவிகளும் செய்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கியத‌ற்கு நாம் நீதி கேட்கிறோம். குற்றவாளிகள் சர்வதேச சமூகத்தின் முன்பாக நிறுத்தக் கூடிய சந்தர்ப்பம் தகைந்து வருகிறது. இந்த நேரத்தில் பிள்ளைக்கறி தின்பவனின் குரல்வளத்தை மெச்சுவதும், உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அவனது கோயிலை இடித்தான் என்பதும் எத்தகைய சந்தர்ப்பவாதம்?

ஹிட்ல‌ரின் படையால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை பற்றி பல நூறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று ஸ்டீவன் ஸபீல்பெர்க் இயக்கிய சிண்ட்லர்ஸ் லிஸ்ட். இந்தப் படத்தில் யூதர்களின் படுகொலைகள் கச்சிதமாக சித்த‌ரிக்கப்பட்டிருந்தது. வரலாறை ஸ்பீல்பெர்க் மறு உருவாக்கம் செய்திருந்தார் என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் படம் வெளிவந்த போது பல அறிவு‌‌ஜீவிகள் படத்தை எதிர்த்தனர்.

யூதர்கள் அன்று படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படம் வெளிவரும் போது நிலைமை மாறிவிட்டது. யூதர்கள்தான் இன்று பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொடூரமான ஆக்கிரமிப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் யூதர்கள்பால் கருணை ஏற்படுத்தும் சிண்ட்லர்ஸ் லிஸ்டை ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருக்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். சுருக்கமாக ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு ஆன்ம பலம் தராதீர்கள்.

இந்த அறிவு வெளிச்சம் நமது அறிவு‌‌ஜீவிகளுக்கு இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எதி‌ரியின் கருணையை நம் மீது பீய்ச்சியடிப்பதன் மூலம் நடந்த படுகொலைக்கான நீதியை இவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். எதி‌ரியின் நல்ல அம்சங்களை பட்டியலிடுவதன் மூலம், பார் நான் எவ்வளவு நடுநிலையான விமர்சகன் என்று மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் மார்தட்ட கொடுக்கப்படும் விலை எத்தகையது என்பதை அறிவு‌‌ஜீவிகள் உணர வேண்டும்.

தமிழ் அமைப்புகளும், தமிழ் திரையுலகமும் மேற்கொண்ட முயற்சிகளும் அதன் பலன்களும் காலத்தின் கட்டாயம். அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் ஒவ்வொரு கலைஞனும், தமிழனும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழனுக்கு நேர்மையான அஞ்சலியை செலுத்தியிருக்கிறான். இந்த அஞ்சலிதான் ஒவ்வொரு தமிழனின் ஆகச் சிறந்த மனசாட்சியாக இருக்க முடியும்.

நன்றி - வெப்துனியா

Monday 7 June 2010

மக்களுக்கு எதிராக புலிகளும் இராணுவமும்

வன்னியில் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் மீது புலிகளும் இராணுவமும் அடக்கு முறைகளையும், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

வவுனியா வடக்கு, மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளில் மக்கள் சிறு சிறு பகுதிகளில் துண்டு துண்டாக குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரில் அதிகளவான மக்களும் முல்லைத்தீவில் குறைவான மக்களும் குடியமர்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் இன்றுவரை முகாம்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள். கண்ணி வெடிகள் அகற்றப்படாமை காரணமாகவே இம் மக்கள் குடியமர்த்தபடாமல் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் எவ்வித அவசரமும் காட்டப்படவில்லை. இந்திய ராணுவமும் இலங்கை இராணுவமும் சேர்ந்து இவற்றை அகற்றி வருவதாக செய்தி ஊடகங்களில் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான பலனை காண முடியாமல் உள்ளது. வேண்டுமென்றே மக்கள் மீள குடியமர்வதை அரசாங்கம் தாமதிக்கிறது என்றே இங்கு வன்னியிலுள்ள மக்கள் நம்புகிறார்கள்.

அதற்கு ஏற்றால் போல வன்னியின் பல பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டி எழுப்பபடுகின்றன. பல பிரதேசங்களில் பாகங்களாக பொருத்தி அமைக்கின்ற வீடுகளுக்கான கட்டுமானப்பொருட்கள் பெருமளவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இவை யாருக்காக என்ற கேள்வி மக்கள் மனங்களில் உள்ளது. இவற்றை இரண்டு நாட்களில் பொருத்தி வீடுகளை அமைத்து விடலாம். ஆனால் இவை மக்களுக்கு வழங்கப்படுகின்றவை அல்ல. இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு என்ற போர்வையில் வன்னியில் பாரிய அளவில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தவே திட்டங்கள் தீட்டப்படுவதாக தெரிகிறது.

மக்களை பொறுத்தவரை வெகு சிலருக்கு இந்தியாவினால் தகடுகளும் சீமெந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு எவ்வித கட்டுமானப் பொருட்களும் வழங்கப்படவில்லை. தொழில் செய்வதற்கு எவ்வித ஏற்பாடுகளும், உதவிகளும் இல்லாத காரணத்தால் மக்களிடம் பணமும் இல்லை. எனவே மிகப்பெரும்பாலான மக்கள் சிறு சிறு குடிசைகளை அமைத்துக்கொண்டு நீர், மின்சாரம், முறையான போக்குவரத்து என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் விடப்பட்டுள்ளனர்.

அவர்களது குடிசைகள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் பத்தடி தூரத்திலேயே கண்ணி வெடிகளும், ஏவுகணைகளும், வெடிக்காத ஏனைய வெடிபொருட்களும் தாராளமாக பரவிக்கிடக்கின்றன. இவற்றை தாண்டியே தண்ணீர், விறகு போன்றவற்றை சேகரிக்க வேண்டியுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தண்ணீருக்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இம் மக்களது குழந்தைகள் இந்த வெடி பொருட்கள் உள்ள சூழலில்தான் வசிக்கின்றனர். அவர்கள் எவ்விதம் இந்த கண்ணி வெடிகள், ஏனைய வெடி பொருட்களை இனம் காண முடியும்? தெரிந்தே அவர்கள் அவ்விதம் விடப்பட்டு இருக்கிறார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே மிக கொடுமையான போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி வந்தவர்களே இந்த மக்கள். கிளிநொச்சி வரை புலிகள் தந்திரமாக பின்வாங்குவதாக நம்பி அவர்களுடன் விரும்பியே இந்த மக்கள் சென்றனர். எனினும் கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்கள் அங்கிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லவே விரும்பினர். ஆனால் அதற்கு புலிகள் அனுமதிக்கவில்லை.

கடுமையான காயம் அடைந்தவர்கள் கூட வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் யுத்தம் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு உக்கிரமடைந்த போதும் கூட புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. புலிகளை மீறி சென்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். அதே போல அங்கிருந்து தப்பி சென்றவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றார்கள்.

கடைசி நாட்களில் பெருமளவில் வெளியேறிய பொது மக்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் தப்பிச்சென்ற பெரும்பாலானவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்ட அவர்களது உடலங்களை கடற்படை வள்ளங்களில் கொண்டு சென்று கடலில் கொட்டியுள்ளனர்.

கடைசி நாட்களில் 30 000 வரையான பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்த மக்கள், போராளிகள் என 27 000 இற்கும் மேற்பட்டோர் குற்றுயிருடன் புதைக்கப்பட்டார்கள். வாகனங்களில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வாகனத்தோடு தகர்க்கப்பட்டார்கள். ஒரு குறுகிய சிறு பிரதேசத்துக்குள் வாழ்ந்த மக்கள் மீது பல்குழல் பீரங்கிகள் குண்டுகளை பொழிந்தன.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஆண்- பெண் பிள்ளைகள் புலிகளால் பலவந்தமாக கதறக்கதற கடத்தி செல்லப்பட்டு அவர்களது கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. தமது பிள்ளைகளை பாதுகாக்க முயன்ற பெற்றோர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டார்கள் இதிலிருந்து தப்புவதற்கு பெற்றோர் சிறுமிகளைக்கூட திருமணம் செய்து வைத்தனர். ஆனால் போர் உக்கிரம் அடைய அனைவரும் பலாத்காரமாக இழுத்துச்செல்லப்பட்டனர்.

போர் முடிவடைய ஓரிரு நாட்கள் இருந்த போது கூட இளம்பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு அவர்களது தலை முடியை புலிகள் கத்தரித்துள்ளனர். இதன் பலன் ஒன்றுமறியா அப்பாவி பெண்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி புதைக்கப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் சிறைகளில் வாடுகிறார்கள்.

இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டு தமது போராட்ட அர்ப்பணிப்பை காட்டிய புலி உறுப்பினர்கள் தற்போது இராணுவத்துடன் இயங்கி தமது விசுவாசத்தை காட்டி வருகிறார்கள். அதிலும் கொஞ்சம் சிங்களம் பேசத்தெரிந்த புலிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். சரணடைந்த இந்த சில நூறு புலி உறுப்பினர்கள் தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் தமது விசுவாசத்தை நிருபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே போராளிகளையும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்களையும் காட்டிக்கொடுப்பது இவர்களது பணியாக உள்ளது. தனிப்பட்ட கோப தாபங்களும் தீர்த்துக்கொள்ளப்படுகிறது.

மக்கள் மீள குடியேறிய பகுதிகளில் அதிகளவில் கொள்ளை, குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெயாத நபர்கள் அங்கிருந்த கணவன் மனைவியை வாளினால் வெட்டியும், துப்பாக்கியினால் சுட்டும் துன்புறுத்தி அங்கிருந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதில் மனைவியான விக்னேஸ்வரியின் கை துண்டிக்கப்படும் நிலையில் காணப்பட்டதுடன் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. கணவனான இராசலிங்கத்திற்கு வயிற்றுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதை விடக்கொடுமையாக மீளக்குடியேறிய மக்கள் மீது இராணுவம் பாலியல் கொடுமைகளை புரிந்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கு காட்டிக்கொடுக்கும் புலிகள் உதவி வருகிறார்கள்.

விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது 6 இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த விசாரணைகள் வழமை போல மூடி மறைக்கப்பட்டு விடும் என்பதை பலரும் அறிவார்கள்.

கண்ணி வெடியகற்றல், வேலிகட்டல், வீடு கட்ட உதவுதல் போன்றவற்றிட்கு சில இராணுவத்தினர் உதவி செய்கின்றனர். ஆனால் அவ்வாறு பகலில் நோட்டமிடுகின்ற சில இராணுவத்தினர் இரவில் பெண்கள் மீது வன்கொடுமை புரிகிறார்கள். இதில் இராணுவத்தினருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த புலிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

சரியோ பிழையோ தலைமை இருக்கும் போது கட்டுப்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது மிக மோசமான கொடுமைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் புலிகள் என இவர்களால் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை எடுத்துச்சொல்ல அமைப்புகளோ, செய்தி ஊடகங்களோ அங்கு இல்லை. போக்குவரத்து ,மின்சாரம் போன்ற வசதிகள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்? எங்கு தப்பிச்செல்ல முடியும்?

எதிரி, சிங்களவன் என்று சொல்லப்பட்டவர்கள்தான் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், எங்களுக்கு ஈழம் பெற்று தருவதாக சொன்னவர்களுமா கொடுமைப்படுத்த வேண்டும்?

கார்த்திகேசு ஜெயகாந்தன்

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.