Friday 7 May 2010

கருணாநிதி- சில கிலு கிலுப்பைகளும்…. ஒரு கருப்புக் கொடியும்

குழந்தைகளுக்கு நாம் கிலு கிலுப்பை வாங்கிக் கொடுப்போம். ஆனால் என்னதான் விசித்திரமான சதங்கள் வருகிற கிலு கிலுப்பை என்றாலும் குழந்தை சில நாட்கள் மட்டுமே கிலு கிலுப்பையை ரசித்துச் சிரிக்கும்… பின்னர் கிலு கிலுப்பை சலித்து விடும். அடுத்த பொம்மையைக் கொண்டு வந்து குழந்தைக்கு கொடுத்தால் அதோடு விளையாடத் துவங்கி விடும்.

ஆனால் வித விதமான கிலு கிலுப்பைகளை வைத்து ஒரு எண்பது வயது குழந்தைக்கு கிலுக்கம் ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையும் கொஞ்சம் கூட சலிக்காமல் காட்டப்படுகிற கிலு கிலுப்பைகளுக்கெல்லாம் பல மணி நேரம் ஒதுக்கி ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஊரெங்கும் பாராட்டு விழா, பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா என்று ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே கருணாநிதிக்கு காட்டப்படும் கிலு கிலுப்பைகளின் ஊழைச் சத்தம் தாங்க முடியவில்லை.

சமீபத்தில் ஒரு செய்தி. சில மூத்த பத்திரிகையாளர்கள் கலைஞரைச் சந்தித்தார்களாம். பெண் சிங்கம் படத்தில் வந்த வருமானத்தை மக்களுக்கு வழங்கியமைக்காகவும், இளைஞன் பட வருமானத்தை மக்களுக்கே வழங்கியதற்காகவும் இனி உங்களை கலைஞர் என்றே சொல்லக் கூடாது. வள்ளல் என்றுதான் சொல்ல வேண்டும் என பத்திரிகையாளர்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனாராம் கலைஞர்.

தொடர்ந்து காட்டப்படும் இந்த கிலுக்குகளில் உள்ள ஏளனத்தைக் கூட இவர்கள் அந்த முதியவரிடம் எடுத்துச் சொல்வார்களோ என்னவோ? இப்போதெல்லாம் அரசியல்வாதிகள், தமிழார்வலர்கள், இலக்கியவாதிகள், என எல்லோருமே இப்படி கையில் ஆளுக்கொரு கிலுக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். ” கோவையில் நடை பெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலைஞருக்கு தொல்காப்பியர் விருது வழங்க வேண்டும்”" என்று செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்தார் தமிழண்ணல். ஆறிக்கை விட்ட மறுநாளே அவருக்கு மாநாட்டுக் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி வளைப்பது?

எப்படி துதிப்பது என்பதை எல்லாம் இந்த தலைமுறை இளைஞர்கள் இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கிலு கிலுப்பைகளின் உச்சம் என்றால் காஞ்சிபுரத்தில் நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவைச் சொல்லலாம். திமுக நடத்திய அந்த விளாவில் திமுக வருடாவடம் கொடுக்கும் விருதில் ஒரு விருதான அண்ணா விருதை திமுக தலைவர் கருணாநிதியே பெற்றுக் கொண்டார். பெற்றுக் கொண்டார் என்பதே எவ்வளவு அபத்தம் பாருங்கள். விழா நடத்தவோ, மேடை போட வேண்டிய அவசியமோ இல்லாமல் பேசாமல் அறிவாலயத்திலிருந்தே அந்த விருதை எடுத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால் அதுதான் கருணாநிதி. அதை ஒரு மாநாடு மாதிரி நடத்தி பல பேர் வேடிக்கை பார்க்க தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்வார். ஆக இந்த எண்பது வயது குழந்தை. தனக்கான கிலுக்கை தானே செய்து கொள்கிறது. கருணாநிதி கிலுக்குகளை மட்டுமே விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட ஜெகத்ரட்சன் திடீரென மத்திய அமைச்சர் ஆவதில் உள்ள ரகசியமும் இதுதான், தமிழண்ணன், சிலம்பொலி செல்லப்பன். முகம் மாமணி போன்ற அல்லக்கைகள் பண்ணுகிற அலப்பறைகளின் தந்திரமும் இதுதான். விரைவில் மேலவை வர இருப்பதால் இன்னும் பல கிலுக்குகளை நீங்கள் கேட்கலாம். பார்கக்லாம்.

இடைவிடாது கேட்டுக் கொண்டே இருந்த கிலுக்குச் சதங்களுக்கிடையில் கருணாநிதிக்கு தோழர்களின் அந்தச் சத்தத்தைக் கேட்க சகிக்கவில்லை. கையில் கருப்புக் கொடியோடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களைத் தாக்கிய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு காட்டப்பட்ட கருப்புக் கொடிதான் எதிர்ப்பரசியலில் கருணாநிதிக்கு காட்டப்பட்ட முதல் எதிர்ப்புக் கிலுக்கு. இப்படியும் செய்வார்களா? இவர்கள் யார்?

ஒரு சிறு குவினர், ஐந்து, அல்லது ஆறு பேர், ஊடக விளம்பரத்துக்காக, என்றெல்லாம் பேசுகிறவர்கள்தான் கருணாநிதிக்கு வித விதமான கிலுக்குகளைக் காட்டி உற்சாகத்திலாழ்த்தியவர்கள். இதை எப்படி டீல் செய்வது என்பது தெரியாது கருணாநிதியோ உயர்நீதிமன்றத்தில் கருப்புக் கொடி காட்டிய்வர்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள், தலித் விரோதிகள் என்று பிரச்சனையை மடை மாற்றினார்.

கருப்புக் கொடியை ஆதரிப்போம்

………………………………………………………………

கருப்புக் கொடியின் வலிமை கருணாநிதிக்கும் தெரியும் பல மணிநேரங்கள் இந்திரா காந்தியை மதுரை விமான நிலையத்துக்குள் முடக்கிய கருப்புக் கொடிகள் கருணாநிதியினுடையது. ஆனால் தேர்தல் அரசியலில் கலந்து போர் வெறி இந்திய அரசுக்கு காவடி தூக்கும் ஏவல் ஆளாக மாறிப் போன பின் கருப்பு மறைந்து மஞ்சளும் பச்சையும் பிடித்த நிறமாகிப் போனது அவருக்கு, அதனால்தான் பார்ப்பனர்களே கருணாநிதியை பாராட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதை சிலர் முதிர்ச்சி என்கிறார்கள்.

பச்சையான குடும்ப,சர்வாதிகார சந்தர்ப்பவாதத்தைத் தவிற இதில் வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்கள் மீது காட்டுமிராண்டித்தமான தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர் கருணாநிதி. அன்றைக்குப் உயர் நீதிமன்றம் போர்க்களாமான மாலையில் ஏதோ தனக்குத் தெரியாமல் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது போல பதறிய கருணாநிதி.

சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த படியே உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது. நீங்கள் விரும்பினால் நானே ஆம்புலன்சில் உங்களை வந்து நேரில் சந்திக்கிறேன் என்று கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு அன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. மரியாதையும் இல்லை அசம்பாதிவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதி விரும்பியிருந்தால் அப்போதே அவர்களை பதவியை விட்டு நீக்கியிருக்கலாம். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவருக்கு பதவியுர்வு வழங்கி கோவைக்கு அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் ஒருவர் இன்னொருவர் மீது பழியைப் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றீக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர்கள் யார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகளோ ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகளாக மாறி அடிவாங்கிய வழக்கறிஞர்களுக்கே அட்வைஸ் செய்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் இன்றுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவோ துரை ரீத்யாக நடவடிக்கைக்கோக் கூட உள்ளாகவில்லை.

ஒரு வருடம் கழிந்து விட்டது. இடையில் கருணாநிதிக்குக் காட்டப்பட்ட கிலுக்குகளில் வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்றமும் விடுபடுகிறதே என்று கருணாநிதி நினைத்து அதற்கான தருணத்திற்காகக் காத்திருந்தார். அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர் நீதிபதிகள். அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவ கருணாநிதியையே அழைப்பது என்று முடிவெடுத்தனர். உயர்நீதிமன்றத்திற்குள் கருணாநிதி நுழையக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வந்தார் கருணாநிதி. முகத்துக்கு நேர மனித உரிமை பாதுகாப்பு மையத்ச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள்.

ஆர்.சி. பால்கனகாராஜ்.

……………………………………

தங்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வேண்டி கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் திமுக ரௌடிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்க, சென்னை மாவட்ட வக்கீல் சங்கத் தலைவரான பால் கனகாராஜோ கருணாநிதிக்கு பொக்கே கொடுத்து பல்லிளித்தபடி போஸ் கொடுத்தார். அப்படி என்றால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை கிளித்தெரிந்ததும், வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பை மீறி பணிக்குச் சென்ற திமுக வழக்கறிஞர்களை சங்கத்தை விட்டு நீக்குகிறோம் என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று உதார் விட்டதும், இப்போது வெறும் நாடகம் என்பது உண்மையாகியிருக்கிறது. திமுகவின் வேலைத் திட்டத்தின் கீழ் கொதித்தெழுந்த வழக்கறிஞர்களுள் ஊடுருவி சங்கத் தலைவர் பதவியை பயன்படுத்தி அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தவர்தான் இந்த பால் கனகாராஜ். இப்போது மேடையிலேயே தாக்க போலீசை அனுப்பியவருக்கு பூச்செண்டு கொடுத்தன் மூலம் அது அம்பலமாகியிருக்கிறது.

டாக்டர் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் யார்?

………………………………………………………………………

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களைப் போலீசை ஏவித் தாக்குதல் நடத்தியதோடு போலீசையும் பாதுகாத்தார் கருணாநிதி. இப்போது வழ்க்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது என்று கருப்புக் கொடி காட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களை தன் கட்சிக் குண்டர்களை விட்டுத் தாக்கியதோடு. அவர்களை தலித் விரோதிகளாகவும், அம்பேதகருக்கு எதிரிகளாகவும் சித்தரித்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞர்கள் அம்பேத்கர் சிலை திறந்ததையோ அந்த விழாவையோ தடுக்க வில்லை. வழக்கறிஞர்களைத் தாக்கிய கருணாநிதி உயர்நீதிம்னற வழகாத்திற்குள் வரக்கூடாது என்பதுதான் அவர்கள் வைத்த கோரிக்கை. விழா நடந்தது, அம்பேதகர் சிலை திறக்கப்பட்டது, நீதிபதிகளும் பேசினார்கள். யாருக்கும் எந்த எதிர்ப்பும் காட்டப்படவில்லை.

கருணாநிதி பேசத் துவங்கியதும் வழக்கறிஞர்கள் கருப்புக்கொடியைத் தூக்கி கோஷமிட்டனர். என்பதோடு சென்னை உயர்நீதிம்னறத்திலிருந்து பதவி உயர்வுபெற்றுச் செல்லும் நீதிபதிகள் நன்றிக்கடனுக்காவே இந்த விழாவை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கோகலே என்ற உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று பதவி உயர்வு பெற்று உச்ச நீதிம்னறம் சென்றார். அப்படிச் செல்லும் போது, வழக்கறிஞர்களிடம் போராடாதீர்கள். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

இவர் எப்படி போராடும் சக்திகளுக்கு நீதி வழங்குவார் என்பதை நினைத்துப் பாருங்கள். சரி கருணாநிதியின் அம்பேதகர் மீதான திடீர் பாசத்தையும் தலித்துக்கள் மீதான பாசத்தையும் நாம் அவசியம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். பண்ணைகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் இவர்கள் அரசியலில் அறிமுகமானார்கள். இந்த நாற்பது ஆண்டுகளில் பண்ணைகளாகவும், மன்னர்களாகவும், குறு நில மன்னர்களாகவும், இவர்களே மாறிப் போனார்கள், உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் தொடர்பாக பிரச்சனை எழுந்த போது கடைசி வரை அதில் மௌனம் காத்தார். கடைசியில் தீண்டாமைச் சுவரில் ஒரு செங்கல் அளவுக்கு பெயர்த்து ஒற்றையடிப் பாதை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது திமுக அரசு, தமிழகமெங்கிலும் கோவில் நுழைவு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் தெரியும் கருணாநிதியின் தாழ்த்தப்பட்டோர் மீதான பாசம்.

திண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகமெங்கிலும் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்த போது பதறிப் போய் அய்யய்யோ அது வேண்டாம் என்று பதறித் துடித்தவர்தான் இந்தக் கருணாநிதி. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எது எதெல்லாம் பெரும்பான்மை சாதியோ அந்தச் சாதிகளையே பிரதிநிதித்துவம் செய்யும் கருணாநியின் ஆட்சியில்தான் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய 19 விவசாயக் கூலிகள் அடித்துக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார்கள். அன்றைக்கும் காவல்துறை கருணாநிதியின் கையில்தான் இருந்தது.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றொரு சட்டம் கொண்டு வரப்படும், அர்ச்சகர் பயிற்ச்சிப்பள்ளிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அர்ச்சகர் பள்ளியில் படித்த பல நூறு மாணவர்கள் கையில் சான்றிதழோடு தெருவில் நிற்கிறார்கள். அரசு நிர்வாகமே இந்து நிர்வாகமாக மாறி அவர்களை ஆலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறது. அத்தோடு அர்ச்சகர் பயிர்சிப்பள்ளிகளையே இழுத்து முடியது கருணாநிதி அரசு. உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கில் கூட மனு தர்மத்திற்கு எதிராகவோ, ஆகம விதிகளுக்கு எதிராகவோ தனது வாதத்தை வைக்க வில்லை இந்த பெரியாரின் தம்பியின் அரசு. இதுதான் கருணாநிதியின் அம்பேதகர் பாசம். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத்திரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும். ஆமாம் தோழர்களே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியவர்களும் அவர்கள்தான் சிதம்பரம் கோவிலில் தமிழ் உரிமைக்காக போராடி வென்றவர்களும் அவர்கள்தான்.

வழக்கறிஞர்களை தாக்கி விட்டு அந்த அயோக்கியத்தனத்தை மறைக்க கருணாநிதி அணிந்த முகமூடிதான் அம்பேதகர். கருணாநிதி இப்போது அணிந்துள்ள அம்பேதகர் முகமூடியைத்தான் சட்டக்கல்லூரி மோதல் சம்பவத்தின் போது நாம் பார்த்தோமே! அன்பார்ந்த நண்பர்களே!

………………………………………..

எல்லோரும் எல்லா காலத்திலும் மடையார்களாக இருக்க மாட்டார்கள். எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு தன்னை எல்லோரும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிற கருணாநிதி ஊடகங்க முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாயை அடைக்கிறார். ஈழப் போரின் போது, சேதுக்கால்வாய் திட்டத்தின்போது, முல்லைப் பெரியார் விவாகரத்தில், ஓகேனக்கலில் என கருணாநிதியின் உண்மை முகம் வெகு வேகமாக அம்பலப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு எந்த விதமான எதிர்ப்புகளும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கருணாநிதி ஊடகங்களை செய்தி வெளியில் வராமல் இருக்க ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறார்.

கருப்புக் கொடி விவாகரத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதியையும் மீறி உண்மை வெளிப்பட இப்போதோ கருங்காலிகள் என்றும், தலித், அம்பேதகர் விரோதிகள் என்றும் தோழர்களை முத்திரை குத்துகிறார். சுப்பிரமணியசுவாமி என்னும் மொசாட்டின் பார்ப்பன ஏஜெண்டுக்காக அடியாள் வேலை பார்த்த கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் காட்டிய கருப்புக் கொடி போராட்டம் நியாயமானது மட்டுமல்ல ஜனநாயக ரீதியிலானதுமாகும் கூட, அதை போலீசிடம் அனுமதி வாங்கி விட்டுச் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று சாதாரண ஒரு அரங்கக்கூட்டம் நடத்தக் கூட போலீஸ் அனுமதி என்னும் அளவுக்கு போலீஸ்சிடம் அதிகாரத்தை குவித்து வைத்துள்ள கருணாநிதி. இந்திராவுக்கு எதிராக மதுரையில் கருப்புக் கொடி காட்டிய போது எந்த போலீசில் அனுமதி வாங்கினார். ஆகவே தோழர்களின் எதிர்ப்பு நியாமானது.அதை நாம் ஆதரிக்க வேண்டும். தொடர்ந்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக போராடும் தோழர்களை ஆதரிப்பதன் மூலம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பார்ப்பன அடிவருடிகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்து நிறுத்த வேண்டும்.

வெண்மணி - நன்றி இனியொரு

0 comments:

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.