Thursday 25 February 2010

இந்தியாவில் ஒரு ஈழம்- Avatar Returns

பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப்பெற்றுக்கொண்டு நாட்டை கொள்ளையடிப்பதற்கு உலகிலுள்ள பல அரசாங்கங்கள் சட்ட அனுமதி வழங்குகின்றன. ஆபிரிக்காவில் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு குழப்பங்களுக்கும் , போர்களுக்கும் இதுவே காரணமாக அமைகிறது. நைஜீரியாவில் பெற்றோலிய எண்ணெய் வளத்திற்காகவும், கொங்கோவில் கொல்டான் (Coltan) கனிமத்திற்காகவும் பல வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.
கொள்ளையுடன் நின்று விட்டால் பரவாயில்லை அதற்கு தடையாக இருக்கின்ற மக்கள் முக்கியமாக பிரதேசவாசிகள் பழங்குடிகள் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே சியராலியோனில் வைரங்களுக்காக இதே மேற்கு நாடுகள் படுகொலைகளை ஏற்படுத்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளை மேற்கு செய்தி ஊடகங்கங்கள் உள்நாட்டு குழப்பங்களாக குறிப்பிட்டு உண்மையை மறைத்து வருகின்றன.
இலங்கையில் கூட விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த வளங்களை சுரண்டுதல் என்ற விடயம் அமைந்தது. இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளம், அதிலுள்ள மீன் வளம் மட்டுமல்லாது எண்ணெய் வளமும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கிழக்கு கரையோரங்களில் காணப்படுகின்ற இல்மனைட் போன்ற தாதுப்பொருட்களை (மற்றும் திருகோணமலை துறைமுகம் போன்றவையும் கூட) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகளை களத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.
வடகிழக்கின் நிலங்களையும் அங்குள்ள வளங்களையும் இப்போது தங்கு தடையின்றி அரசாங்கம் அபகரித்து வருகிறது. புலிகளின் அழிவிற்காக காத்துக்கொண்டிருந்த பல இந்திய நிறுவனங்கள் இப்போதே தமது கடையை விரித்து விட்டன. இந்தியா மூதூர் கிழக்கில் அமைத்துவரும் அனல் மின்நிலையத்திற்காக , அங்கு பூர்வீகமாக வாழ்ந்த ஏறத்தாழ 45 ஆயிரம் குடும்பங்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
இது போலத்தான் இந்திய அரசாங்கங்களும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக கோடிக்கணக்கில் பணத்தையும் சொத்துகளையும் வாங்கிக்கொண்டு கொள்ளை அடிப்பதை ஊக்குவிக்கின்றன. தமிழக அரசாங்கமானது ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த பரிமாற்றத்தில் அரசியல்வாதிகளுக்கு பலகோடிக்கணக்கான பணம் கிடைத்தாலும், விற்பனைத்தொகையில் தமிழக அரசு உரிமை ஊதியம் (ரோயல்டி) 0.02% மட்டுமே என்பது பலரும் அறியாதது.
அதே போலத்தான் ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்திற்காக இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் இந்தியக் கோடீஸ்வரரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான “வேதாந்தா” எனும் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. அங்குள்ள பாக்சைட்டின் இன்றைய விலையில் இதன் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டொலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்) . ஆனால் இந்திய அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ள உரிமை ஊதியம் (ரோயல்டி) 7% க்கும் குறைவானதாகும்.
மலையை தமது பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட பழங்குடி மக்கள் இந்த பகல் இரவு கொள்ளையை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் மலைகள் அவர்களின் வாழிடம் மட்டுமல்ல கடவுளும் கூட. எனினும் இந்த மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இலங்கை அரசாங்கம் வன்னி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளைப்போலவே இங்கும் இராணுவ நடவடிக்கைகள் முழு மூச்சாக இடம்பெறுகின்றன. முள்ளிவாய்க்காலில் யுத்தம் இடம்பெறுகிறது என்பது உலகத்திற்கு தெரிந்திருந்தது - ஆனால் அது இந்தியாவின் அழுத்தம் காரணமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் உதவியுடன் தமிழர்களும் புலிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
இங்கு பழங்குடிகளுக்கு எதிரான போரை இந்தியாவே நேரடியாக நடத்துகிறது. ஆனால் உலகத்திற்கு தெரியாமல் பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான நரவேட்டை இடம்பெற்று வருகிறது. காந்தியம் சாத்வீகம் என பேசிக்கொண்டு நீண்ட காலமாகவே பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் அடியாளாகவே இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் எப்போதும் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்கள். ஆனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி, தொடர்கள் கிரிக்கெட் என மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்ற பொது அறிவு இல்லாமல் மக்கள் தனித்தனி தீவுகளாக வாழ்கின்றனர்.
இந்த மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட் குழுக்கள் போராடி வருகிறார்கள். இந்திய அரசாங்கமோ இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தினமும் மக்களை வேட்டையாடி வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்தொகையான மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வளவு பெரிய மனிதப்படுகொலைகளையும் அநீதியையும் இந்திய அரசாங்கம் செய்துகொண்டு உலகத்திற்கு இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் கூறி வருகிறது. செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பழங்குடி மக்கள் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவர்கள் மாவோயிஸ்ட்களாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்களது சடலங்கள் காடுகளில் வீசி எறியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன.
இவ்வளவையும் செய்து விட்டு இது எல்லாமே இந்த பழங்குடி மக்களது நன்மைக்காகத்தான் அவர்களது முன்னேற்றத்திற்காகத்தான் என கூசாமல் மன்மோகன்சிங் பொய் சொல்கிறார்.
இந்தியா சுதந்திரமடைந்த இந்த 60 ஆண்டுகளில் இந்த பழங்குடி மக்கள் கல்வி, மருத்துவம்,சுகாதாரம் , போக்குவரத்து, அடிப்படை வசதிகள், நிவாரணங்கள் எதுவுமே கிடைக்கப்பெறாதவர்களாகவே வாழ்கின்றனர். அவர்களிடம் எஞ்சியிருப்பது அவர்களது உயிரும் வாழும் மலையுந்தான்.
அந்த மக்களை வேட்டையாடுவதற்காக பல்வேறு பெயர்களில் இராணுவப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. எப்படி இலங்கை அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே மிக கொடூரமான போரை நடத்தி கடைசி சில நாட்களில் மட்டும் 40 000 இற்கும் அதிகமான மக்களைக்கொன்றதோ, அதே போன்று இந்தியா இப்போது செயற்படுகிறது. ஒரு எதிரி நாட்டுக்கு எதிரான போரைப்போல இந்தியா தனது சொந்த மக்கள் மீது போரைத்தொடுத்துள்ளது. இதுவரை 700 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெரியவர்கள் என்று பாகுபாடில்லாமல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவதார் திரைப்படத்தில் இடம்பெறுகின்ற அதே விடயம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. நாவி இந்தத்தவருக்கு பதிலாக இங்கே பழங்குடிகள். பண்டாராவுக்கு பதிலாக இங்கே பழங்குடிகள் வாழும் மலைகள். பாத்திரங்களின் பெயரும் இடமும் வேறு ஆனால் கதை ஒன்று. திரைப்படத்தில் கனிம வளத்திற்காக ஆக்கிரமிக்கும் தீயவர்களுக்கு எதிராக நாவி இனத்தவர்கள் போராடி வெற்றி பெற்றதைப்போல இந்திய பழங்குடிகளும் வெற்றி பெறுவார்களா? அல்லது முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டதைப்போல இந்திய பழங்குடிகளும் தோற்றுப்போவார்களா?

-- ஜீவேந்திரன்
Jeevendran
இந்த கட்டுரை தொடர்பில் உங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் அளிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் வாக்கின் மூலம் இந்த கட்டுரை மேலும் பலரை சென்றடையும் வாய்ப்பை பெறும்.

22 comments:

அப்பாவி said...

மிக அற்புதமான கட்டுரை. மிகவும் அருமை என்று வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. உணர்வுபூர்வமான கட்டுரை, இதை உள்ளங்களால் உணரமட்டுமே முடியும்.கண்களிலே கண்ணீரை வரவழய்த்து விட்டது.

ஆராய்வு said...

அப்பாவி இக்கட்டுரை இடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் நீங்கள் வழங்கிய பின்னூட்டம் எங்களை நெகிழவைத்துவிட்டது. மிகவும் நன்றி

Dr.Rudhran said...

keep writing

வினவு said...

ஆராய்வு நண்பர்களே,

பொருத்தமான நேரத்தில் அவசியமான கட்டுரையை வெளியிட்டமைக்கு ந்ன்றியும் வாழ்த்துக்களும்!

Unknown said...

மக்களைப்பற்றி கவலை படாத அரசாங்கங்கள் இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும், காந்தீயமா? அப்படி என்றால்? என கேட்பார் மன்மோகன்.

Anonymous said...

Dear sir,
nangal cricket and serial parthu payagi ponavargal ungalin katturai arasiyal vathigal makkal nallanil sirithu akkarai kondavgal yendra yenathu karuthai poiyakiyathu, unmayil arasiyal vathigal panathirkaga thangal sontha kudumbathiyum katti kodupavargal yendra karthai sonethiriku nandri i request you pls pls publish articles like this regularly

ஜீவேந்திரன் said...

மிக்க நன்றி ருத்ரன் ஐயா.

ஆராய்வு said...

மிகவும் நன்றி வினவு.

பா.வேல்முருகன் said...

மக்களைப்பற்றி நினைக்காத அரசாங்கம்தான். இன்றைய தினமணி தலையங்கம் படித்துப்பாருங்களேன்.

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜீவேந்திரன் said...

Vels உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

ஜீவேந்திரன் said...

சசிகுமார் உங்கள் வாழ்த்து எங்களை மேலும் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.மிகவும் நன்றி

ஜீவேந்திரன் said...

Anonymous
//nangal cricket and serial parthu payagi ponavargal ungalin katturai arasiyal vathigal makkal nallanil sirithu akkarai kondavgal yendra yenathu karuthai poiyakiyathu, unmayil arasiyal vathigal panathirkaga thangal sontha kudumbathiyum katti kodupavargal yendra karthai sonethiriku nandri i request you pls pls publish articles like this regularly//
பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அடுத்த முறை பெயர் குறிப்பிட்டு எழுதினால் மிகவும் பலனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமையும். நன்றி

Anonymous said...

இந்த வீணாய்ப்போன அரசியல் வாதிகள் நாட்டை மொத்தமாக அடுத்தவர்களுக்கு விற்றுவிட்டு, அவர்களுடைய கல்லாவையும் நிரப்பிவிட்டு,இந்த இனிய தேசத்தில் வாழும் பாமரனின் நிலைமையை கொஞ்சம் கூட நினைக்காமல் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...இவர்கள் கல்லாவை நிரப்புவதற்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களை இந்த நாட்டின் எதிரி என்று முத்திரை குத்தி அவர்களை சாவடித்து விடுவார்கள்...
டேய் வீனைய்ப்போன அரசியல்வாதிகளே உங்களின் அழிவு காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது...

ஜீவேந்திரன் said...

உண்மைதான் Karuppu, ஊழல் அரசியல்வாதிகளுக்கும், ஊழல் அரசியலுக்கும் ஒரு முடிவு வரவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் உதயம் said...

உலகின் ஓவ்வொரு தேசத்திலும், இந்த செயல் துரிதமாக நடந்து கொண்டுள்ளது. மற்றுமொரு சுதந்திர போருக்கு எல்லோரும் தயாராக தான் வேண்டும்

Unknown said...

தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வினவின் மூலம் நான் அதிக தகவல்களை அறிந்து வருகிறேன்...தங்களிடமும் அதை எதிர்பார்க்கிறேன்....இதுபோன்ற கட்டுரைகள் இணையம் சாராத ஏனையோருக்கும் சென்றடைய வேண்டும்...ஒவொவொருவரும் இனி ஊடகப் புழுகளை உதறித் தள்ளிவிட்டு உண்மை அறிய முற்படவேண்டும்...இந்த சாக்கடை அரசியல் வாதிகளை சங்குழியில் மிதித்து நசுக்க வேண்டும்...

ஜீவேந்திரன் said...

தமிழ் உதயம் உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியான நீதியற்ற நிகழ்வுகள்தான் இறுதியில் புரட்சியாக வெடிக்கிறது.

ஆராய்வு said...

சண் சிவா உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களது வலைப்பூக்கள் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

suresh said...

நன்று சொன்னீர்கள் நண்பரே . ஆனால் இதற்க்கான தீர்வு மக்களால கட்டமைக்கபடும் உண்மையான சன நாயக அமைப்பாலே ஏற்படும் .

Anonymous said...

அருமையான கட்டுரை ஜீவேந்திரன்,,,,உங்களின் உலகம் சம்மந்தமான அறிவு மற்றும் வராலாற்றில் நடந்ததே மீண்டும் இப்பொழுது நடக்கிறது என்கிற யதார்த்தமும் இந்த கட்டுரையில் தெளிவாக தெரிகிறது.நன்றி

Post a Comment

 
ஆராய்வு. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.