என்னதான் எமது அரசியல் ஆய்வாளர்கள் மாய்ந்து மாய்ந்து எதிர்வு கூறல்களை முன்வைத்தாலும் நடப்பதென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. உதாரணமாக விடுதலைப்புலிகள் தமது படைகளை பின்னகர்த்தி வந்த போது வெளிநாடுகளில் வதிகின்ற எமது சில அதிமேதாவி அரசியல் ஆய்வாளர்கள் எழுதிய பத்தி எழுத்துகளை இப்போது வாசித்தாலும் சிரிப்பு வரும்.
'விடுதைப்புலிகள் இந்த இடத்தை விட்டு பின்வாங்கியது இந்த காரணத்திற்காக.....அரச இராணுவம் மீள முடியாத பொறியில் விழுந்து விட்டது...... இனிமேல் நடக்கப்போவது இதுதான்.....உச்சக்கட்டம் இனிமேல்தான் ஆரம்பம்... ' என வடிவேலுவை உசுபேத்தியது போல பாவப்பட்ட தமிழ் மக்களை உசுப்பேத்தினார்கள் (குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை).
தமது எதிர்வு கூறல்கள் தொடர்ந்து பொய்த்து வந்தாலும் சிறிதும் கூட வெட்கமின்றி மீண்டும் மீண்டும் புதிய புதிய எதிர்வு கூறல்களை முன்வைத்தார்கள். இதில் மிகப்பெரும் நகைச்சுவை அல்லது துயரம் அந்த ஆய்வாளர்கள் இன்றும் எமது இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்தும் எழுதி வருவதுதான்.
இதே போலத்தான் சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் எழுதித்தள்ளினார்கள்.(காக்கை இருக்க பனம் பழம் விழுந்த கதையாய் பல்வேறு காரணங்களால் விடுதைப்புலிகள் தோற்றுப்போனது இதில் பலருக்கு வாய்ப்பாய் போனது வேறுகதை). குறிப்பாக திவயின பத்திரிகையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து எழுதும் கீர்த்தி வர்ணகுல சூர்ய எனும் பன்னாடையின் எழுத்துக்கள் உலக மகா நகைச்சுவையானது. இந்த அரை லூசு எழுத்தாளரை சக சிங்கள ஊடகவியலாளர்களே ஐந்து சதத்துக்கேனும் மதிப்பதில்லை. ஆனாலும் இவர் தமிழ் மக்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் மிக மோசமான அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கண்மண் பாராமல் எழுதுவதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை (தாங்கள் செய்தால் மரியாதை இல்லை என்பதால் இந்த அரைவேட்காட்டை ஒரு அடியாள் போன்று பயன்படுத்தி கொண்டார்கள் எனலாம்).திவயின ஒரு இனவாத பத்திரிகை என்பதால் இவரது எழுத்துகளை அதுவும் கண்டு கொள்வதில்லை. இப்படியான எழுத்துகளில் தான் அதன் வியாபாரமே தங்கி இருக்கிறது.
கீர்த்தி வர்ணகுல சூர்ய திடீரென்று எழுதுவார்..
'கொழும்பில் 100 தற்கொலை குண்டுதாரிகள் ஊடுருவி விட்டார்கள் ' ...
'வெடிகுண்டு நிரப்பிய லொறியொன்று கொழும்பை நோக்கி வந்து கொண்டிருகிறது'...
'கொழும்பு துறைமுகத்தை தாக்க 500 பேர் கொண்ட புலிகள் படையொன்று உடப்பில் கரை இறங்கி உள்ளது' ...
இப்படி சகட்டு மேனிக்கு போட்டுதாக்குவார். இவரது அண்ட புளுகு ஆகாச புளுகுகளை அதிகார தரப்புகள் மிக நீண்ட காலமாகவே அறிந்திருப்பதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை. இப்படி சிங்கள மக்களிடம் புலிப்பூச்சாண்டி காட்டினால்தான் தங்களால் நிம்மதியாக கொள்ளை அடிக்க முடியும் என்பது அவர்களின் பிழைப்பு (அவனவனுக்கு அவனவன் பிரச்சனை).
ஆனால் எழுத்துக்கூட்டி திவயின வாசிக்கும் இராணுவ, காவல் அடிபொடிகள் இதை வாசித்து விட்டு சோதனை சாவடியில் தமிழ் மக்கள் மீது மலை ஏறுவார்கள்.
அல்லது லஞ்சம் வாங்கி புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் போலிஸ் நிலைய அதிகாரிகள் தனது வீட்டுக்கு மேலும் தேவைப்படும் பணத்தை எப்படி தேடுவது என யோசித்துக்கொண்டிருக்கும் போது இந்த செய்தி தேவ தூதாக வரும். பல சமயங்களில் இவ்வாறான செய்திகளை கீர்த்தி வர்ணகுல சூர்யவுக்கு கசிய விடுவதும் இவர்கள்தான். எல்லாம் ஒரு கிவ் அன்ட் டேக் போலிசிதான்.
பிறகென்ன அடுத்தநாள் பத்திரிகைகள் 'வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, வத்தளையில் சுற்றி வளைப்பு, 300 புலிச்சந்தேக நபர்கள் கைது என செய்திகள் தூள் பறக்கும். இதற்கெல்லாம் காரணம் கீர்த்தி வர்ணகுல சூர்ய போன்ற பன்னாடைகள் தான் என்பதை எங்களது அதிமேதாவி தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் அறிய மாட்டார்கள். உடனே தமது பங்கிற்கு வெளுத்து வாங்குவார்கள். சகல விதமான இன, மத, வரலாறு, தத்துவகோட்பாடுகளை எல்லாம் கலந்து பூசி முட்டையில் மயிர் பிடுங்கும் வீர சாகாசத்தை நிகழ்த்துவார்கள்.
சரி போர் நடக்கும் போதுதான் மக்களை திணறத் திணற அடித்தார்கள். இப்போதுதான் போர் முடிந்து விட்டதே, மக்களுக்கு ஒரு ஓய்வு கொடுக்கலாமே என்ற எண்ணம் இந்த அதிமேதாவி அரசியல் ஆய்வாளர்களுக்கு இருக்கிறதா? கிடையவே கிடையாது. அவர்களுக்கென்றே கேபி முதல் ஜனாதிபதி தேர்தல் வரை எவ்வளவோ விடயங்கள். பிறகென்ன...
''போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு... சக்க போடாய் போட்டுத்தாக்கு...''.
(தயவு செய்து இக்கட்டுரை தொடர்பில் உங்களது விமர்சனங்களையும், வாக்குகளையும் இடுமாறு உங்களை மிகவும் அன்பாக வேண்டுகிறேன்)
http://jeevendran.blogspot.com/
- ஜீவேந்திரன்
Jeevendran
-------------------------------------------------------------------------------
3 comments:
// சரி போர் நடக்கும் போதுதான் மக்களை திணறத் திணற அடித்தார்கள். இப்போதுதான் போர் முடிந்து விட்டதே, மக்களுக்கு ஒரு ஓய்வு கொடுக்கலாமே..// very good
//இதில் மிகப்பெரும் நகைச்சுவை அல்லது துயரம் அந்த ஆய்வாளர்கள் இன்றும் எமது இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்தும் எழுதி வருவதுதான்.//
என்ன கொடுமை இது . மக்களை நிம்மதியாக இவர்கள் வாழ விட மாட்டார்களா?????????????
எழுதியது போதும் தயவு செய்து நிறுத்துங்கள் அதி மேதாவிகளே !
பின்னூட்டம் போட்ட நண்பர்களுக்கும், தமிலிஷில் வாக்களித்த நண்பர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.
Post a Comment